ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!
ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது ஜீப் நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
தயக்கம், நீண்ட கால தாமதத்திற்கு பின் இந்தியாவில் களமிறங்கினாலும், அதிரடி திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா சேர்ந்த ஜீப் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்தியர்களுக்கு அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சியை தரும் விஷயமாக அமைந்துள்ளது.

குறைவான விலை எஸ்யூவி மாடல்களுக்காக தனது தாய் நிறுவனமான ஃபியட் மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைக்கவும் முடிவு செய்திருக்கிறது. எஞ்சின், கியர்பாக்ஸ் போன்றவற்றை டாடா ஒத்துழைப்புடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிய எஸ்யூவி மாடலை தயாரிக்கும் பணிகள் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. ஆனால், இந்த எஸ்யூவி ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளிலையே மிக மிக குறைவான விலை மாடலாக இருக்கும். பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஜீப் தற்போது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அத்துடன், வலது பக்க ஸ்டீயரிங் வீ்ல் அமைப்பு கொண்ட எஸ்யூவிகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்கவும், ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவை தனது முக்கிய உற்பத்தி கேந்திரமாகவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஜீப் நிறுவனத்தின் தலைவர் மைக் மேன்லி கூறுகையில்," ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டாப் மாடல்களுக்கு இணையான அம்சங்களுடன் புதிய எஸ்யூவி இருக்கும். மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியை அமைத்துக் கொள்ளும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உறவு சிறப்பாக இருக்கிறது. திறந்த மனதுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான உறவு நிச்சயம் பலன் அளிக்கும். உலக அளவில் எங்களது எதிர்கால வர்த்தகத்தில் இந்தியாவை மிக முக்கிய மார்க்கெட்டாக கருதுகிறோம் என்று மேன்லி கூறியிருக்கிறார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு இணையான விலையில் புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இரு்பபது குறித்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த எஸ்யூவி மாடல்தான் விலை குறைவான மாடலாக இருக்கும் என்று தெரிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், ரூ.10 லட்சம் விலையிலும் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜீப் நிறுவனம் கூறியிருப்பது இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை தரும் வகையில் இந்த புதிய மாடல் களமிறக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








