கொச்சியில் அமைகிறது டிரக்குகளுக்கான மின் நெடுஞ்சாலை சோதனைக் களம்!
டிரக்குகளுக்கான மின் நெடுஞ்சாலை சோதனைக் களம் கேரளாவில் அமைக்கப்பட உள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
சில மாதங்களுக்கு முன் ஸ்வீடன் நாட்டில் டிரக்குகளுக்கான உலகின் முதல் மின் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல இந்தியாவிலும் மின் நெடுஞ்சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், இந்த நெடுஞ்சாலை திட்டத்துக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவதற்காக ஸ்வீடன் நாட்டு அமைச்சர் தலைமையிலான குழுவுடன் சமீபத்தில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு நல்குவதற்கு முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, கொச்சி அருகே உள்ள மட்டன்சேரி என்ற இடத்தில் மின் நெடுஞ்சாலைக்கான சோதனைக் களம் அமைக்கப்பட உள்ளது. இந்த மின் நெடுஞ்சாலை சோதனைக்களத்தில் வைத்து டிரக்குகள் சோதனை செய்யப்படும்.

அப்போது கிடைக்கும் சாதக, பாதக அம்சங்களை கணக்கிட்டு, மேற்கொண்டு இந்த மின் நெடுஞ்சாலைகளை படிப்படியாக நாடு முழுவதும் நிறுவுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய போக்குவரத்து திட்டம் வெற்றி பெற்று நடைமுறைக்கு வந்தால், நெடுஞ்சாலைகளில் டிரக்குகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அத்துடன், டிரக்குகளால் வெளியிடப்படும் புகை அளவும், எரிபொருள் பயன்பாடும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் ஸ்வீடன் நாட்டில் 2 கிமீ தூரத்துக்கு இந்த மின் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சீமென்ஸ் நிறுவனமும், ஸ்கானியா வாகன தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்த மின் நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தின.

மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை போலவேதான் இந்த தொழில்நுட்பமும் செயல்படுகிறது. சாலையின் ஓரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு, அவை வலுவான கம்பி வடங்கள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும்.

அதேபோன்று, மின்சார ரயில் எஞ்சின்களில் நீங்கள் பார்ப்பது போலவே, டிரக்குகளின் ஜீப்பின் கூரையின் மீது பான்டோகிராஃப் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பான்டோகிராப் கருவியானது, மின் நெடுஞ்சாலையில் பயணிக்கத் துவங்கியவுடன், கம்பி வடங்களை தொட்டுக் கொண்டே பயணிக்கும்.

இங்கு தண்டவாளங்கள் இருக்காது. அதற்காக, பிரத்யேக சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும், இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ஸ்கானியா டிரக்குகள் மின் மோட்டார் மற்றும் டீசல் எஞ்சின் என இரண்டிலும் இயங்கும்.

மின் நெடுஞ்சாலையில் செல்லும்போது மின் மோட்டார்கள் துணையுடன் இயங்கும். மின் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறி சாதாரண சாலையில் பயணிக்கும்போது டீசல் எஞ்சின் துணையுடன் இயங்கும். இந்த திட்டத்தின் மூலமாக வாகன புகை குறையவும், டீசல் பயன்பாடு குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








