இந்தியா வந்தது ஜப்பான் பாகுபலி லெக்சஸ் எல்எக்ஸ் 450 டி ... மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு
ஜப்பானிய நிறுவனமான டொயேட்டா, தனது சொகுசு கார்களை லெக்சஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரின் கீழ் விற்பனை செய்து வருகிறது. லெக்சஸ் பிராண்ட் சொகுசு கார்களுக்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆசியா மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளிலும் டொயேட்டா மற்றும் லெக்சஸ் நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை டொயேட்டா மாடல் கார்கள் மட்டுமே சந்தையில் உள்ளன.

லெக்சஸ் வாகனஙகளை இந்தியாவில் அறிமுகப்படுவதற்கான முயற்சியை கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, அதுதொடர்பான சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவது அவசியம்.
அதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக இத்தனை நாள்கள் லெக்சஸ் இந்தியாவுக்குள் கால் பதிக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழைப் பெறுவதற்காக லெக்சஸ் நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி மாடலான எல்எக்ஸ் 450 டி மாடல் கார் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லெக்சஸ் இஎஸ் 300 எச் மாடல் இந்தியாவுக்கு அனுமதி சான்றிதழ் பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்தது. இப்போது அந்நிறுவனத்தின் இன்னொரு மாடலும் இந்திய மண்ணுக்கு புதிதாக வந்துள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்து, அதற்கான உரிமங்கள் உடனடியாகக் கொடுக்கப்படும்பட்சத்தில், லெக்சஸ் நிறுவன கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
லெக்சஸ் எல்எக்ஸ் 450 டி மாடலைப் பொருத்தவரை 4.5 லிட்டர் திறன் கொண்ட வி-8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 268 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பிரம்மாண்ட வண்டி இது. இதில் மொத்தம் 6 கியர்கள் உள்ளன.
பக்கா ஸ்போர்டியான வடிவமைப்புடன் கூடிய பிரம்மாண்ட பாகுபலி மாடல் இது.


Click it and Unblock the Notifications








