ஒரே நாளில் 30,000 கார்களை டெலிவிரி செய்து மாருதி புதிய சாதனை!
ஒரேநாளில் 30,000 கார்கள் டெலிவிரி கொடுத்து மாருதி நிறுவனம் புதிய சாதனை படைத்தது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
தந்தேராஸ் தினத்தையொட்டி, ஒரே நாளில் 30,000 கார்களை டெலிவிரி கொடுத்து புதிய சாதனை படைத்திருக்கிறது நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி.
தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் வரும் தந்தேராஸ் சுப தினத்தில் வீடு, வாகனம், ஆபரணங்களை வாங்குவதன் மூலமாக தங்கள் வாழ்வு செல்வ செழிப்போடு இருக்கும் என்று வட இந்தியர்கள் நம்புகின்றனர்.

இந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிலையில், தந்தேராஸ் தினத்தில் புதிய வாகனங்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மாருதி டீலர்களில் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு நேற்று தந்திராஸ் தினத்தையொட்டி மாருதி கார்கள் டெலிவிரி கொடுக்ப்பட்டன. இதனால், நேற்று மாருதி கார் டீலர்களில் வழக்கத்திற்கும் அதிகமாக கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டன.

இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும் 30,000 கார்களை மாருதி டெலிவிரி கொடுத்தது.கார் மார்க்கெட்டின் விற்பனையில் பாதியை பிடித்து வைத்திருக்கும் மாருதி நிறுவனத்துக்கு இது புதிய சாதனை.

கடந்த மாதம் பண்டிகை காலம் துவங்கியது முதலே மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்களுக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும், ஆல்ட்டோ, டிசையர், வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களும் வழக்கம்போல் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. கடந்த மாதத்தில் 2.74 லட்சம் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதில், மாருதி நிறுவனம் மட்டும் 1.32 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், தந்திராஸ் பண்டிகையினாலும் கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை சூடுபறக்கிறது. எனவே, இந்த மாதத்தில் கார் மற்றும் வாகன விற்பனை இந்த ஆண்டின் அதிகபட்ச அளவை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








