ஐரோப்பாவில் உலாவும் மாருதியின் மேம்படுத்தப்பட்ட புதிய எஸ் - கிராஸ் கார்
இந்தியாவின் பாரம்பரிய கார் நிறுவனமான மாருதி தயாரித்த பெரும்பாலான மாடல்கள் வைரல் ஹிட்டடித்துள்ளன. ஏ-செக்மெண்ட் காரில் மட்டும்தான் மாருதி கிங்... மற்றபடி செடான் பக்கமெல்லாம் அந்நிறுவனத்தால் நெருங்க முடியாது என்ற கருத்து இருந்தது. அதைத் தவிடு பொடியாக்கி சியாஸ் செடான் மாடலை அறிமுகப்படுத்தி, விற்பனையில் கபாலி டிக்கெட் மாதிரி மாஸ் காட்டியது மாருதி.
இதேபோல, மாருதி நிறுவனத்தின் ப்ரீமீயம் கிராஸ் ஓவர் மாடலான எஸ் கிராஸும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கார்களில் ஒன்று. விஷயம் என்னவென்றால் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பிலான எஸ்-கிராஸ் மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

புதிய எஸ்-கிராஸ் எப்படியிருக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், ஐரோப்பியாவில் உள்ள டீலரிடத்தில் அந்த மாடல் கார் இருந்தது தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் திருத்தம் செய்யப்பட்ட அந்த கார் வசமாக கேமராவுக்குள் சிக்கியிருக்கிறது.
இந்த மாடலைப் பொருத்தவரை தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எஸ்-கிராஸ் மாடலில் இருந்து முகப்பு பகுதி மாறுபட்டதாக இருக்கிறது. புதிய எஸ்-கிராஸ் மாடலின் கிரில் டிசைன் இடைவெளி விடப்பட்டு பொருத்தப்பட்ட பார் கம்பிகளைப் போலத் தோற்றமளிக்கிறது.
அதேபோல், பம்பர், முகப்பு விளக்குகள், பேனட் உள்ளிட்டவற்றிலும் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளன. அதேவேளையில் தொழில்நுட்ப ரீதியாக புதிய மாடலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய எஸ்-கிராஸைப் போலவே இதிலும் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரு வேறு மாடல்களில் டீசல் எஞசின்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பக்க வீல் டிரைவிங், மேனுவல் கியர் ஆகிய வசதிகளும் இரண்டிலும் ஒரே மாதிரியாக உள்ளன. டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும், டீசல் விலை உயர்வு காரணமாகவும், பெட்ரோல் எஞ்சின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு, மாருதி எஸ்-கிராஸில் பெட்ரோல் எஞ்சின் மாடலும் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. ஆல் நியூ எஸ் - கிராஸ் மாடல் சர்வதேச மார்க்கெட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை அடுத்த ஆண்டு முற்பாதியில் புதிய எஸ்-கிராஸ் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. புதிய மாடலின் வடிவமைப்பு, சிறப்பம்சங்களை வைத்துப் பார்க்கும்போது, அதுவும் இந்திய மக்களின் ஈர்ப்பைப் பெற அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








