ஹரியானா கிராமத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்துத் தந்த மாருதி நிறுவனம்...
மண்ணாசையால் இதிகாசத்தில் மகாபாரதப் போர் நடந்தது. அதே காரணத்துக்காக கலிகாலத்திலும் இரண்டு உலகப் போர்கள் மூண்டு பல லட்சக்கணக்கானோர் மடிந்தனர். சரி... ஒரு வேளை மூன்றாம் உலகப் போர் மூண்டால், அது என்ன காரணத்துக்காக நடைபெறும் என்று கேட்டால் பெரும்பாலானோர் கூறும் பதில் நீருக்காக என்பதாகத்தான் இருக்கும்.
ஆம்... நீரின்றி அமையாது இவ்வுலகு என்று வள்ளுவன் கூறிய வாக்கு தடம் பிறழாமல் இன்று கண்கூடாக நடக்கிறது. ஒரு பக்கம் காட்டாற்று வெள்ளம் அடித்து நொறுக்கினாலும், மறுபக்கம் குடிக்க நீர் இல்லாமல் பல பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் வையத்தில் வாழ்பவர்க்கு எல்லாம் என்று கூறிய பாரதி, ஒருவேளை இன்று இருந்திருந்தால், வாய்க்கு நீர்தர வேண்டும் இந்த வையத்தில் உள்ளோர்க்கு எல்லாம் என்று கூட பாடியிருக்க வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு நிலை இன்று தண்ணீருக்கு... சரி விஷயத்துக்கு வருவோம். ஹரியாணா மாநிலம், மனேசர் பகுதியில் அமைந்துள்ள கசன் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம்.
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாட்டர் ஏடிஎம் எனப்படும் இந்த குடிநீ்ர் வழங்கும் மையத்தை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைத்துள்ளது மாருதி நிறுவனம். இதன் மூலம் 10,000 கிராமவாசிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்டர்லைஃப் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது மாருதி. வாட்டர் ஏடிஎம் அமைப்பதற்கான இடத்தை கசன் கிராம மக்கள் வழங்கியுள்ளனர். சுத்திகரிப்பதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மின் செலவை அந்த கிராம நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு 1,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறனுடன் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் மையத்தை அப்பகுதி எம்எல்ஏ பீம்லா சௌத்ரி, மாருதி விற்பனை பிரிவு இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தின் பராமரிப்புப் பணிகளை வாட்டர்லைஃப் இந்தியா நிறுவனம் 10 ஆண்டு காலத்துக்கு இலவசமாக மேற்கொள்ளும். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 35 பைசாவுக்கு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
வலிமையான இந்தியாவுக்கு தேவை சுகாதாரமான உள்கட்டமைப்பு. அதன் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கிராமங்களுக்கு வழங்க முயற்சி எடுத்த மாருதி நிறுவனத்துக்கு டிரைவ் ஸ்பார்க்கின் பாராட்டுகள்...


Click it and Unblock the Notifications








