ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணிக்கும் புதிய மிட்சுபிஷி எஸ்யூவி!
பஜேரோ மூலம் எஸ்யூவி மார்க்கெட்டில் புகழ்பெற்ற மிட்சுபிஷி நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இதற்கான தொழில்நுட்ப அம்சங்களை தாங்கிய ஒரு பிரத்யேக எஸ்யூவி கான்செப்ட் ஒன்றையும் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த மாடலை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் இப்போது அந்த நிறுவனம் களமிறங்கியிருக்கிறது.

கான்செப்ட் மாடல்
மிட்சுபிஷி eX என்ற பெயரி்ல அந்த கான்செப்ட் எஸ்யூவி அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் நடந்த மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது. இதனை மிகவும் செயல்திறன் மிக்க மாடலாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

மிரட்டலான டிசைன்
மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் மாடல், மிகவும் மிரட்டலாகவும், நவநாகரீகமாகவும் காட்சியளிக்கிறது.

மின் மோட்டார்கள்
இந்த எஸ்யூவியில் தலா 94 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட தலா ஒரு மின்மோட்டார்கள் இரண்டு ஆக்சில்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து சக்கரங்களுக்கும் பவரை செலுத்தும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது.

பேட்டரி
இந்த எஸ்யூவியில் 45 kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவை இலகு எடை கொண்டதாகவும், மின் மோட்டார்களுக்கு தேவையான மின்சாரத்தை அபரிமிதமாக வழங்கும் திறன் படைத்தாகவும் நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரேஞ்ச்
இந்த லித்தியம் அயான் பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 400 கிமீ தூரம் பயணிக்க முடியும். இப்போது மின்சார கார்கள் என்றாலே, குறைந்த தூரம் பயணிக்கும் என்ற நினைப்பையும் இந்த எஸ்யூவி போக்குமாம்.

கையாளுமை
இந்த எஸ்யூவியில் சிறந்த கையாளுமையை தரும் வகையில், பேட்டரிகள் காரின் தரைப் பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதோடு, வெஹிக்கிள் டைனமிக்ஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் சிறந்த கையாளுமை கொண்ட மின்சார எஸ்யூவி என்ற பெயரை எடுக்கும் என்று மிட்சுபிஷி தெரிவிக்கிறது.

இடவசதி
இந்த எஸ்யூவியில் நடுவில் பில்லர் அமைப்பு இருக்காது. இதன்மூலமாக, காரில் ஏறுவதும், இறங்குவதும் எளிதாக இருக்கும். அத்துடன், பயணிகளுக்கு சிறப்பான இடவசதியையும், பொருட்களுக்கான இடவசதியையும் பெற்றிருக்கும்.

பிரத்யேக விண்ட்ஷீல்டு
இந்த எஸ்யூவியின் விண்ட்ஷீல்டிலேயே தகவல்களை காண்பிக்கும் பிரத்யேக வசதி கொடுக்கப்பட்டிருக்கும். இதன்மூலமாக, ஓட்டுனரின் கவனச் சிதறல் தவிர்க்கப்படும்.

சைடு மிரர்கள் இருக்காது
சைடு வியூ மிரர்கள் இருக்காது. அதற்கு பதிலாக உயர் துல்லியம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். திரையிலேயே பின்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்த்துக் கொள்ளளாம்.

பாதுகாப்பு
தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, கண்ணுக்கு புலப்படாத பகுதிகளில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் வசதி, சாலை நிலையை கண்டறியும் சென்சார்கள், போக்குவரத்து நெரிசலை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதி என முற்றிலும் அடுத்த தலைமுறை எஸ்யூவியாக களமிறக்கப்பட உள்ளது.

இருக்கை வசதி
இந்த எஸ்யூவியில் 5 பேர் பயணிக்க முடியும். 4,240மிமீ நீளமும், 1780மிமீ அகலமும், 1,575மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும்.

ஆஃப் ரோடு
மிட்சுபிஷி எஸ்யூவிகள் ஆஃப்ரோடில் திறம்பட செயலாற்றும். ஆனால், இது மின்சார எஸ்யூவியாக இருக்கிறதே என்ற ஐயப்பாடு எழலாம். ஆனால், இது சிறப்பான ஆஃப்ரோடு எஸ்யூவியாகவும் இருக்கும் வகையில், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படுகிறதாம்.

இதர அம்சங்கள்
நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் உதவி இல்லாமல் இயக்குவதற்கான ஆட்டோ பைலட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் போன்ற பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் சேர்ப்பதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

வீட்டிற்கு மின்சார சப்ளை
இந்த எஸ்யூவியின் பேட்டரியை வைத்து டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்களை இயக்க முடியும். சாதாரணமாக 4 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த பேட்டரியிலிருந்து பெற முடியும்.

அறிமுகம்
வரும் 2020ம் ஆண்டில் இந்த புதிய மின்சார எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








