சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பிரம்மாண்ட கார் பார்க்கிங் வளாகம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பிரம்மாண்ட கார் பார்க்கிங் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னையின் முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கார்கள் வந்து செல்கின்றன.
ஆனால், அங்கு கார்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், அங்கு கார்களில் வரும் பயணிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், வாடகை கார்களை பயன்படுத்தும் நிர்பந்தத்திற்க ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பாதாள கார் பார்க்கிங் வளாகம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதிய கார் பார்க்கிங் வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கார் பார்க்கிங் வளாகம் மூன்று தளங்களை கொண்டதாக பூமிக்கு அடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த கார் பார்க்கிங் வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம், மின்சார ரயில் நிலையம் மற்றம் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு எளிதாக செல்வதற்கான வழிகளும் ஏற்படுத்தப்படும்.

இந்த கார் பார்க்கிங் வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 கார்கள் வரை நிறுத்த முடியும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த புதிய கார் பார்க்கிங் வளாகத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தலைமை திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறியியல் துறை தலைவர் ஏகே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கார் பார்க்கிங் வளாகம், அந்த பகுதியில் ஏற்படும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும், ரயில் நிலையங்களுக்கு காரில் வரும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Picture credit: Wiki Commons


Click it and Unblock the Notifications








