ஆடி, பென்ஸ் கார்களை திருடி விவசாய பம்புசெட்டுகளாக மாற்றும் திருடர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
டெல்லியில், சொகுசு கார்கள் திருடுபோவது தொடர் கதையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கார்கள் திருடு போவதாக போலீசாரின் திடுக்கிடும் தகவல் கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த கார்கள் கூட அசால்ட்டாக ஆட்டை போடுவதுதான் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியையும், தலைவலியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, சொகுசு கார்கள் திருடு போவது குறித்து போலீசார் தீவிர புலனாய்வு மேற்கொண்டனர். அப்போது, கார் திருட்டில் ஈடுபட்ட ஒருவனை பிடித்து விசாரித்தனர். அதில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. அதாவது, இந்த திருட்டு சம்பவங்களில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்கிறது.

சாஃப்ட்வேர் எஞ்சினியர் முதல் சாதாரண மெக்கானிக் வரை இந்த திருட்டு கும்பலில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, விலை உயர்ந்த அந்த சொகுசு கார்களில் இருந்த இம்மொபைலைசர் என்ற பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை மீறி காரை ஸ்டார்ட் செய்வது எளிதான காரியம் அல்ல.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில், அந்த காரை எவ்வாறு திருடினர் என்பது குறித்த அந்த திருடனின் பதில்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதுகுறித்த விசாரணையில், புதிய காரை புக்கிங் செய்து வாங்குவது போல, இந்த திருட்டு கார்களும் ஆர்டரின் பேரில்தான் திருடப்பட்டு விற்கப்படுகிறதாம்.

அதேபோன்று, குறிப்பிட்ட கார் சாவியின் சாஃப்ட்வேர் குறியீடுகளை அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணத்தை காட்டி வளைத்துவிடுகின்றனர் அல்லது சர்வீஸ் மையத்தில் மெக்கானிக் போல சேரும் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் மூலமாக கார் சாவியின் சாஃப்ட்வேரை பெற்றுள்ளனர்.

அதனை லேப்டாப்பில் உள்ள விசேஷ சாப்ட்வேர் மூலமாக, குறிப்பிட்ட காருக்கான மாஸ்டர் சாஃப்ட்வேரை தயாரித்து, அதனை உயர் ரக கார்களில் இருக்கும் சாஃப்ட்வேருடன் இணைத்து கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்து திருடியுள்ளனர்.

இம்மொபைலைசர் பொருத்தப்பட்ட கார்களை திருடவே முடியாது என்று கார் நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில், லேப்டாப்பை பயன்படுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று, கார் எங்கிருக்கிறது என்று காட்டும் ஜிபிஎஸ் சாதனத்தையும் செயலிழக்கச் செய்து திருடிச் சென்றிருக்கின்றனர்.

அதன்பிறகு அந்த காரை எளிதாக ஆட்டையை போட்டுள்ளனர். காரை திருடும்போது சந்தேகம் வராத வகையில், பெண்களை வைத்து திருடியிருக்கின்றனர். ஏனெனில், காரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் கொடுக்கும்போது இதுபோன்று முதலுக்கு மோசம் ஏற்படும் வாய்ப்பு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கார் திருடியவுடனே, அதனை திருட்டு கும்பலுக்கு சொந்தமான ரகசிய இடத்திற்கு கொண்டு வந்து தனித்தனியாக பிரித்துவிடுவார்களாம். அதன்பிறகு, அந்த கார்களில் இருக்கும் சைடு வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல ஆக்சஸெரீகளை ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் மூலமாக ஒரிஜினல் உதிரிபாகம் என்று கூறி நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனராம்.

அதேபோன்று, கார் எஞ்சின்களை தனியாக கழற்றி, அதனை இதர மாநிலங்களில் விற்பனை செய்கின்றனராம். அதாவது, விவசாய பம்புசெட்டுகளில் நீர் இறைக்கும் எந்திரமாக பயன்படுத்துகின்றனராம். சிலர் வீடுகளுக்கு ஜெனரேட்டராகவும் மாற்றி பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக அளவில் இதுபோன்ற திருட்டு கார்களின் எஞ்சின்கள் அதிக அளவில் விவசாயிகளிடம் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது போலீசாருக்கும், கார் உரிமையாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டில் டெல்லியில் 31,000 கார்கள் திருடு போயுள்ளதாம். அதில், 1,770 கார்கள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டிருக்கிறதாம். அதாவது, வெறும் 5 சதவீதம் மட்டுமே திரும்ப மீட்கப்பட்டிருக்கிறதாம்.

அதிகம் திருடுபோகும் டாப் - 10 கார்கள்... அத்துடன் திருட்டிலிருந்து காரை பாதுகாப்பதற்கான டிப்ஸ்!!


Click it and Unblock the Notifications








