மேலும் 3 கார்களில் குடை வைக்கும் இடவசதி: ஸ்கோடா அசத்தல்!
சர்வதேச அளவில் மாஸ் கார் நிறுவனமான ஸ்கோடா தயாரித்த மாடல்கள் எல்லாம் பார்க்க படு ஸ்மார்ட். அதன் காரணமாக வாடிக்கையாளகர்களின் குட் புக்கில் இந்த நிறுவனம் ஸ்ட்ராங்கான இடத்தைப் பிடித்துள்ளது.
அதையெல்லாம் தாண்டி செயல்பாடுகள் என எடுத்துக் கொண்டால், அதிலும் சமத்தான இடத்தையே பிடிக்கின்றன ஸ்கோடா கார்கள். அவ்வளவு ஏன்? அண்மையில் ஜேடி பவர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த பிரச்னைகள் கொண்ட காராகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய காராகவும் முதலிடத்தில் வலம் வந்தது ஸ்கோடாவின் தயாரிப்புகள்தான்.

அதுபோலவே காருக்குள் சில புதுமைகளைப் புகுத்தும் விஷயத்திலும் ஸ்கோடா கில்லாடி. காருக்குள் பக்கா பாதுகாப்பு அம்சங்களை மற்ற நிறுவனங்கள் வழங்கினால், அதைத் தாண்டி காரை விட்டு இறங்கும்போது மழை வந்தால் அதற்கு குடையும் தருகிறோம் என்று இன் - பில்ட் அம்பெர்லா ஆப்ஷனை ஸ்கோடா சூப்பர்ப் மாடலில் வழங்கி அசத்தியது அந்நிறுவனம்.
விஷயம் சின்னதுதான். ஆனால், அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதன் விளைவாக தற்போது ஸ்கோடாவின் அனைத்து மாடல்களிலும் குடை வைப்பதற்கான பிரத்யேக இடவசதியுடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சூப்பர்ப் மாடலில் உள்ளது போல் முன்பக்கக் கதவின் உள்ளே ஸ்மார்ட்டாகப் பொருத்தப்பட்ட குடைகளாக அவை இருக்காது. இருக்கைக்கு கீழேதான் பிற மாடல்களில் அந்த ஆப்ஷனை வழங்குகிறது ஸ்கோடா நிறுவனம். ஆக்டோவியா மாடலைப் பொருத்தவரை கூடுதலாக 25 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,100) கொடுத்தால் மட்டுமே குடை வழங்கப்படும்.
பிற ஸ்டேண்டர்டு மாடல்களில் அவை இன் - பில்ட் ஆப்ஷனாகவே வருகின்றன. அதேவேளையில் யேட்டி, ரேபிட் மாடல்களில் இந்த வசதியை ஸ்கோடா நிறுவனம் வழங்கவில்லை.
பாக்டீரியா தொற்று ஏற்படாத துணியில் செய்யப்பட்ட அந்தக் குடைகள், தண்ணீரை உடனே வடித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலும், வாடிக்கையாளர்களின் உணர்வுகளைத் தொடும் வகையிலும் இந்தத் திட்டத்தை வகுத்திருக்கிறது ஸ்கோடா.
ஆக மொத்தம் கார் (மழை) காலங்களில்கூட இனி ஸ்கோடா காரை நம்பிப் பயணம் மேற்கொள்ளலாம். ஏனென்றால் அந்நிறுவனம்தான் - கொடை - வள்ளலாயிற்றே...


Click it and Unblock the Notifications








