ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி பற்றி 7 முக்கிய விஷயங்கள்!
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சிறந்த கட்டமைப்பு கொண்ட கார்களை தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது. இந்தியாவிலும் ஸ்கோடா கார்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. கார்கள் சிறப்பாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகள்தான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடை கல்லாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், புத்தம் புதிய எஸ்யூவி மாடல் ஒன்றை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்ய இருப்பது உலக அளவில் கார் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை எழுப்பியிருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் வாய்ப்பு அதிகமுடைய இந்த எஸ்யூவி பற்றிய முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதல் மாடல்
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் 120 ஆண்டு கால வரலாற்றில் வெளியிடப்பட இருக்கும் முதல் 7 சீட்டர் எஸ்யூவி மாடல் இதுதான். யெட்டி என்ற எஸ்யூவி மாடல் இருந்தாலும், இதுதான் 7 பேர் செல்வதற்கு ஏதுவான முழுமையான எஸ்யூவி மாடலாக வருகிறது.

பிளாட்ஃபார்ம்
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புகழ்பெற்ற எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா கார்கள் தயாரிக்கப்பட்ட பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 125 எச்பி பவரை அளிக்க வல்ல 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 180 எச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. இதுதவிர, 150 எச்பி மற்றும் 190 எச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வருகிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டிஎஸ்ஜி டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

வடிவம்
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி 4,697மிமீ நீளமும், 1,882மிமீ அகலமும் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2.7 மீட்டர். எனவே, 7 பேருக்கான போதுமான இடவசதியை அளிக்கும் என நம்பலாம். இந்த கார் 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதுடன் 300மிமீ உயரத்திற்கான நீர் நிலைகளில் கூட தங்கு தடையின்றி செல்லும்.

சிறப்பம்சங்கள்
ஸ்கோடாவின் பாரம்பரியம் மிக்க டிசைன் தாத்பரியத்தில் உருவாகியிருப்பதால், தோற்றம் எஸ்யூவி பிரியர்களை வசீகரிக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், பெரிய வீல் ஆர்ச்சுகள் போன்றவையும் இந்த எஸ்யூவிக்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன.

வசதிகள்
நவீன தொழில்நுட்ப வசதிகளின் சங்ககமாக கூறும் அளவுக்கு வசதிகளுடன் வருகிறது. ரேடார் துணையுடன் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தானியங்கி பிரேக் சிஸ்டம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் வசதி, 360 டிகிரி கோணத்தில் பின்புறத்தை காட்டும் கேமரா என படடியல் நீள்கிறது.

இந்தியாவுக்கு எப்போது?
அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரீஸ் மோட்டார் ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவி்ல எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








