கவலைப்படாதீங்க... இந்த கார்களை புக்கிங் செய்தவர்கள், கூடிய சீக்கிரமே டெலிவிரி எடுத்துடலாம்!
கடந்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்ட சில புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அவற்றின் இமாலய முன்பதிவு எண்ணிக்கை, அந்த கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் மதிப்பை காட்டுவதாக அமைந்தாலும், பல மாத காத்திருப்பு காலத்தால், ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதோடு, விரைவாக டெலிவிரி கொடுக்கும் விதத்தில், முன்னணி கார்களின் உற்பத்தியை அதிகரிக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், இந்த பட்டியலில் இடம்பெறும் கார்களை முன்பதிவு செய்வோர் கூடிய விரைவில் தங்களது புதிய காரை டெலிவிரி பெறும் வாய்ப்பு உள்ளது.

மாருதி பலேனோ முன்பதிவு
மாருதி பலேனோ காருக்கு இதுவரை 80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், சில வேரியண்ட்டுகளுக்கு 6 மாதங்கள் வரை காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. மேலும், இந்த காத்திருப்பு காலத்தை கண்டு, ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு வாடிக்கையாளர்கள் பிறழும் வாய்ப்பும் உள்ளது. இதனை கருதி, மாருதி பலேனோ காரின் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு
ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி ஆலையில்தான் பலேனோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் முழு வீச்சில் மேற்கொள்ள மானேசர் ஆலை நிர்வாகத்தை மாருதியின் விற்பனைப் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன்மூலமாக, 6 மாதங்கள் என்ற காத்திருப்பு காலம் வெகுவாக குறைய இருக்கிறது. தற்போது ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தால் மானேசரில் உள்ள மாருதி ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், விரைவில் உற்பத்தியை முழு வீச்சில் மேற்கொள்ள மாருதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100
பட்ஜெட் விலையில் மினி எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா கேயூவி100 நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து, காத்திருப்பு காலமும் 3 மாதங்கள் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கு 50 சதவீத முன்பதிவு கிடைத்திருக்கிறது. இதையடுத்து உற்பத்தியை கூட்டுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

உற்பத்தி நிலை
மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள மஹிந்திரா ஆலையில்தான் கேயூவி100 உற்பத்தி செய்யப்படுகிறது. மாதத்திற்கு 5,500 கார்கள் என்ற எண்ணிக்கையில் மஹிந்திரா கேயூவி100 உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் சில மாதங்களில் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் உற்பத்தி மாதத்திற்கு 8,500 யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட உள்ளன. இதனால், இந்த காரை முன்பதிவு செய்திருப்போர், ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட கால அளவைவிட முன்கூட்டியே டெலிவிரி பெறும் வாய்ப்பு உள்ளது.

ரெனோ க்விட்
மிக குறைவான விலையில் அட்டகாசமான கார் என்று வாடிக்கையாளர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட ரெனோ க்விட் காருக்கு, தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று போட்டியாளர்களை வாய் பிளக்க வைத்துள்ளது ரெனோ க்விட். இருந்தாலும், அதிக முன்பதிவு காரணமாகவும், சென்னை மழை வெள்ளத்தால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்ட காரணத்தாலும், ரெனோ க்விட் காரின் காத்திருப்பு காலம் பல மாதங்கள் வரை நீள்கிறது. சில வேரியண்ட்டுகளுக்கு 10 மாதங்கள் வரை நீள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரெனோ க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும், 1.0லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். அதோடு, ஏற்றுமதிக்காக வேறு தயாராகி வருகிறது. இதனால், அதிகப்படியான காத்திருப்பு காலத்தால் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியும், ஏமாற்றமும் ஏற்பட்டிருப்பதை தவிர்க்க, உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு
சென்னையில் உள்ள ரெனோ- நிசான் கூட்டணி ஆலையில்தான் ரெனோ க்விட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 5,000 முதல் 6,000 யூனிட்டுகள் என்ற அளவில் இருக்கும் ரெனோ க்விட் காரின் உற்பத்தியை மாதத்திற்கு 8,000 முதல் 10,000 வரை எண்ணிக்கையில் உயர்த்துவதற்கு ரெனோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், காத்திருப்பு காலம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா
யாரும் எதிர்பாராத, ஏன் ஹூண்டாய் நிறுவனமே எதிர்பார்க்காத ஒரு இமாலய முன்பதிவு எண்ணிக்கையை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெற்றது. இதுவரை 75,000க்கும் அதிகமானோர் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளனர். இதனால், வழக்கம்போல் காத்திருப்பு காலமும் எகிறிக் கிடக்கிறது. ஆனால், ஹூண்டாய் க்ரெட்டா வந்துவிட்டால், அந்தஸ்தும் பல படி மேலே ஏறிவிடும் என்ற நம்பிக்கையில் எந்த பக்கமும் திரும்பாமல் பலர் ஹூண்டாய் க்ரெட்டாவை வாங்கியே தீரும் முடிவுடன் முன்பதிவு செய்து காத்திருருக்கின்றனர். இதனால், சில வேரியண்ட்டுகளுக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது.

உற்பத்தி அதிகரிப்பு
சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் உற்பத்தி 10,000 என்ற அளவில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், காத்திருப்பு காலம் 3 மாதங்களாக குறைந்துள்ளது. எனவே, முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, புதிதாக முன்பதிவு செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இது சந்தோஷமான செய்தியே. அத்துடன், வரும் ஜூன் மாதத்திலிருந்து மாதத்திற்கு 12,500 யூனிட்டுகளாக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் உற்பத்தி அதிகரிக்கப்பட இருக்கிறது. இதனால், ஏற்றுமதியையும், உள்நாட்டு தேவையையும் மிகச் சரியான அளவில் சமன் செய்ய முடியும்.

மஹிந்திரா டியூவி300
4 மீட்டரில் ஓர் 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக வந்த மஹிந்திரா டியூவி300 மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும், சரியான விலையும் வாடிக்கையாளர்களிடத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவிக்கு 2 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருக்கிறது.

உற்பத்தி அதிகரிப்பு
தற்போது மாதத்திற்கு 4,000 மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதனால், ஏஎம்டி மாடலுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications








