லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அடிப்படையிலான புதிய டாடா எஸ்யூவி!
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கம்பெனியான டாடா மோட்டார்ஸ் லிமிடெட், தனது துணை நிறுவனமான ஜாகுவார்-லேண்ட்ரோவருடன் இணைந்து பல்வேறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஜாகுவாரின் லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் என அல்ட்ரா மாடல் வண்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எஸ்யூவி மாடலான லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது டாடா நிறுவனம். பக்கா எஸ்யூவி மாடலான அந்த வண்டி, அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது வரும் 2018-ஆம் ஆண்டு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் புதிய செய்தி என்னவென்றால், அந்த மாடல் வண்டியை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அமெரிக்க அரசின் சட்ட அனுமதிகள் மற்றும் தரப் பரிசோதனை ஆகியற்றுக்கு புதிய மாடல் எஸ்யூவி உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
க்யூ 501 என்ற சங்கேதப் பெயரில் இந்த மாடல் அழைக்கப்படுகிறது. டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வெளிப்புறத் தோற்றம், சிறப்பம்சங்கள் ஆகியவை வித்தியாசமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
டொயோட்டா ஃபார்ட்ச்சூனர், ஃபோர்டு எண்டோவர் போன்ற எஸ்யூவி மாடல்களுக்குப் போட்டியாக இந்த க்யூ 501 காரைக் களமிறக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருக்கிறது டாடா நிறுவனம். இந்த புதிய எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் மல்டி ஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது. அது 170 பிஎச்பி முறுக்கு விசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முதலில் மேனுவல் கியர் வழங்கப்படலாம் என்றும் பிறகு க்யூ 501 எஸ்யூவி மாடலில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாடலின் விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என ஆட்டோ மொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ, சர்வதேச மார்க்கெட்டில் டாடா நிறுவனத்தின் எஸ்யூவி கார் கால் பதிக்கப் போகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். அதேவேளையில், அதன் செயல்பாடுகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை மற்ற மாடல்களுக்கு சவாலாக விளங்கினால் மட்டுமே க்யூ 501 மாடலால் தாக்கு பிடிக்க முடியும் என்பது நிதர்சனம்...


Click it and Unblock the Notifications








