டாடா நானோ காரின் ஆயுசு இன்னும் 3 ஆண்டுகள்தான்?
டாடா நானோ காரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கான காரணங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
உலகின் மிக குறைவான விலை கார் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ கார் பல்வேறு பின்னடைவுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அண்மையில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி, டாடா நானோ கார் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
நடுத்தர மக்களின் கார் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவான அந்த கார் மிகப்பெரிய தோல்வியாகவும் அவர் கூறியிருந்தார். அதற்காக முதலீடு செய்யப்பட்ட ரூ.1,000 கோடியும் வீண் என்றும் கூறியிருந்தார். டாடா சன்ஸ் குழுமத்தின் தற்காலிக தலைவராக ரத்தன் டாடா மீண்டும் பதவி ஏற்றாலும், டாடா நானோ காரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது.

ஆம், இன்னும் 3 ஆண்டுகளில் டாடா நானோ கார் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. டாடா நானோ கார் தயாரிப்புக்கு அதிக அளவில் மலிவு விலை பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், கார்களுக்கான கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இந்த புதிய விதிகள் டாடா நானோ காரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் கட்டுமானத் தரத்தை சோதிப்பதற்கான கிராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனை விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன. 2018ம் ஆண்டிலிருந்து ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் அமலுக்கு வருகிறது.

இதனால், கார்களின் கட்டுமான அமைப்பிலும், கட்டுமானத் தரத்தையும் மேம்படுத்தியாக ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, டாடா நானோ காரில் பல மாற்றங்களை செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

ஆனால், டாடா நானோ கார் தோல்வியான திட்டம், அதற்கான முதலீடு அனைத்தும் வீண் என்று சைரஸ் மிஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கான கூடுதல் முதலீடுகளை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிச்சயம் ஆர்வம் காட்டாது.

அதுமட்டுமின்றி, டாடா நானோ காரின் தோற்றம் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக உள்ளது. அதனை மாற்றுவற்கும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய முதலீடுகளால் டாடா நானோ காரின் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தோற்றத்திலும், கட்டுமானத் தரத்திலும் மேம்படுத்தி விலையை அதிகரித்தால் அதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதிலும் சந்தேகம் இருக்கிறது. அத்துடன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளை சேர்ப்பதன் மூலமாக கார் விலை இன்னும் அதிகரிக்கும்.

சந்தைப்போட்டி கடுமையாக உள்ள இந்த சூழலில், விலை அதிகம் கொண்ட டாடா நானோ காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். டாடா நானோ காரின் விற்பனை மிக மோசமான நிலையில்தான் உள்ளது.

ஆனாலும், தற்போது சொற்ப எண்ணிக்கையில் டாடா நானோ கார்கள் விற்பனையாவதற்கு, ஏஎம்டி மாடல் ஒரு காரணமாக கூறலாம். ஆனாலும், தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் காராக இருக்கவில்லை. தற்போது நானோ காரின் விலை 2 லட்சத்தை தாண்டுகிறது. டாடா நானோ கார் ரூ.2.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் ரெடிகோ கார் ரூ.2.42 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மார்க்கெட்டில் புதிய மாடல் என்பதுடன், சற்றே வித்தியாசமான டிசைனும் வாடிக்கையாளர்களுக்கு நானோ காரை விட சிறந்த சாய்ஸாக மாறியிருக்கிறது.

பட்ஜெட்டை சற்றே கூட்டினால் மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ரெனோ க்விட் கார்களை வாங்கிவிடலாம். இந்தளவு போட்டி இருக்கும் சூழலில் டாடா நானோ காரை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்வது என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விழலுக்கு இறைத்த நீர் போன்றாகிவிடும் என்றே கருதப்படுகிறது.

பட்ஜெட்டை சற்றே கூட்டினால் மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ரெனோ க்விட் கார்களை வாங்கிவிடலாம். இந்தளவு போட்டி இருக்கும் சூழலில் டாடா நானோ காரை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்வது என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விழலுக்கு இறைத்த நீர் போன்றாகிவிடும் என்றே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








