கேமரா கண்களில் சிக்கிய டாடா ஸ்ட்ரோம் புதிய டீசல் எஞ்சின் மாடல் கார்...
தில்லியில் 2.0 லிட்டருக்கு கூடுதலாக திறன் கொண்ட டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையால் பெரும்பாலான கார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சில, பெட்ரோல் வகை வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டன. மேலும் சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் கார்களைத் தயாரிக்க முனைப்பு காட்டின.
ஆனாலும் கூட, டீசல் வாகனங்களின் விற்பனையை ஈடுகட்டுவதற்கு அந்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. இதனால், தில்லி அரசு மீது உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த கார் நிறுவனங்கள் கூட அதிருப்தியில் இருந்தன.

இந்த நிலையில், டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு மாற்றாக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, சோர்ந்து போயிருந்த கார் நிறுவனங்களுக்கு எனர்ஜி டிரிங்க் கொடுத்தைப் போல புத்துணர்ச்சியைத் தந்தது. உடனடியாக செயலில் இறங்கி மீண்டும் டீசல் எஞ்சின் கார்களின் விற்பனையைத் தொடங்கி விட்டன.
ஆனாலும் கூட அந்நிறுவனங்களுக்கு உள்ளூர ஒரு விதமான பய உணர்வு இருந்து கொண்டேதான் உள்ளது. எங்கு மீண்டும் தில்லி அரசு ஏதாவது வகையில் 2.0 லிட்டர் திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு தடை விதித்து விடுமோ என்பதுதான் அந்த பயம்.
அதைக் கருத்தில் கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது எஸ்யூவி மாடலான ஸ்டோர்ம் காரை 1.99 செயல்திறன் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தி அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏற்கெனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஸ்கார்பியோ ஆகியவற்றில் அதே வகையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது டாடா நிறுவனமும் அந்த வரிசையில் களமிறங்கியுள்ளது. புதிய டீசல் எஞ்சின் மாடலான டாடா ஸ்ட்ரோம் காரின் சோதனை ஓட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இது கேமராவின் கண்களுக்கு வசமாக சிக்கியுள்ளது. தில்லியில் பிஸியான சாலைகளில் வரும் நாட்களில் புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட டாடா ஸ்ட்ரோம், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஸ்கார்பியோ கார்களை காணலாம்.
ஒருவேளை ஏற்கெனவே இருந்ததைப் போல அவற்றுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், எங்கள் கார்களில் 1.99 லிட்டர் திறன் எஞ்சின்கள்தான் உள்ளன என்று கூறி வசதியாகத் தப்பித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








