புரட்சிகர நுட்பத்துடன் வரும் டெஸ்லாவின் முதல் பறக்கும் கார்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெஸ்லா மாடல் 3 மின்சார கார் அமெரிக்காவிலுள்ள டெஸ்லா டிசைன் ஸ்டூடியோவில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைந்த எலக்ட்ரிக் கார் என்பதால், அமெரிக்கா மட்டுமின்ரி, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். இதனால், வெறும் 24 மணி நேரத்தில் 1.80 லட்சம் பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் அறிமுக நிகழ்ச்சியில் மற்றொரு முக்கிய தகவலையும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டார். அது, ஓட்டுனர் இல்லாமல் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் முழுமையான தானியங்கி கார். இந்த கார் தானியங்கி காராக மட்டுமின்றி, பறக்கும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அதாவது, டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி வசதியுடன் கூடிய பறக்கும் கார் மாடலாக வெளிவர இருக்கிறது.

மாடல் விபரம்
கடந்த சில ஆண்டுகளாகவே, டெஸ்லா நிறுவனம் பறக்கும் காரை தயாரிப்பதாக யூகச் செய்திகள் றெக்கை கட்டி பறந்து வந்தன. இந்த நிலையில், டெஸ்லா மாடல் F என்ற பெயரில் புதிய பறக்கும் கார் தயாரிக்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

கூட்டணி
தானியங்கி பறக்கும் கார் தொழில்நுட்பத்தையும், காரையும் டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பறக்கும் கார் தொழில்நுட்பத்திற்காக இத்தாலியை சேர்ந்த வோலண்ட்டே ஸெர்ஸோ என்ற நிறுவனத்துடன் டெஸ்லா கூட்டணி அமைத்திருப்பதும் நேற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

புரட்சிகர நுட்பம்
இதுவரை அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டெர்ராஃப்யூஜியா, ஏரோமொபில் உள்ளிட்ட பறக்கும் கார்களைவிட இது சிறப்பானது. அதாவது, இதற்கு ஓடுபாதை தேவையிருக்காது. இருந்த இடத்திலிருந்து செங்குத்தாக மேலே எழும்பி பறக்கவும், செங்குத்தாக வந்து தரையிறக்கவும் முடியும். இது நிச்சயம் புரட்சிகரமான பறக்கும் காராக இருக்கும். ஒருவேளை, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டால், இருந்த இடத்திலிருந்து நேராக மேலே எழும்பி பறந்து செல்ல முடியும்.
Image Credit: Futurism

வேகம்
பிற பறக்கும் கார்களைவிடவும் இது வேகமும் அதிகம். அதாவது, மணிக்கு 482 கிமீ வேகம் வரை பறக்கும். இதன்மூலமாக, மிக மிக விரைவான போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

பெருமிதம்
டெஸ்லா மாடல் எஃப் பறக்கும் காரை இயக்குவதற்கு ஓட்டுனர் தேவையிருக்காது. எனவே, இந்த பறக்கும் காரை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவையிருக்காது.

மின்சார கார்
டெஸ்லாவின் முதல் பறக்கும் கார் பேட்டரியில் இயங்கும் என்பதால், புகை வெளியிடாது. இதனால், சுற்றுச்சூழலுக்கும் சிறப்பானதாக இருக்கும்.

அறிமுகம்
வரும் 2019ம் ஆண்டில் டெஸ்லா மாடல் எஃப் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது உலக அளவில் கோடீஸ்வரர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








