இந்தியாவின் கார் ஜிபிஎஸ் துறையில் முதலீடு செய்யும் வாட்ஸ் அப் இணை நிறுவனர்!
வாழ்க்கையில் சோறு இல்லாமல் கூட இருந்துவிடலாம்... வாட்ஸ் - அப் இல்லாமல் இருக்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். காலையில் எழுந்ததில் இருந்து, இரவு (சில சமயங்களில் நள்ளிரவு) தூங்கும் வரை நம்முடனேயே இருக்கும் ஒரு ஆத்மார்த்தமான அப்ளிகேஷனாவே அது மாறிவிட்டது.
ஆங்கிலேயருக்குப் பிறகு நம்மை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் அடிமையாக்கி வைத்திருக்கும் பெருமையும் அதற்கு உண்டு. அத்தகைய அப்ளிகேஷனை நிறுவிய நிறுவனர்களில் ஒருவரான பிரெய்ன் அடோன் என்பவர் இந்தியாவில் முதலீடு செய்யப் போகிறராம்.

இந்த முறை மொபைல் அப்ளிகேஷனில் அல்ல அவரது முதலீடு. கார் ஜிபிஎஸ் தொழில்நுட்ப சேவைகளைக் கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனமான டிராக் என் டெல் என்ற கம்பெனியுடன் அவர் கைகோர்த்துள்ளார்.
டிராக் என் டெல் நிறுவனம் கார்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, அதன் வாயிலாக அந்த கார் எங்கு பயணிக்கிறது? எந்த இடத்தில் இருக்கிறது? என்பதை அறிவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நிறுவனமாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக வண்டியில் இருக்கும் பெட்ரோலின் அளவு, பராமரிப்புத் தேவைகள் உள்ளிட்டவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்கிறது டிராக் என் டெல் நிறுவனம்.
கார் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், உடனடியாக கடத்தப்பட்டவர்களை மீட்கவும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் பங்கு அதிமுக்கியமானது. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கார்களை முறையாகப் பராமரிப்பதற்கான நினைவூட்டல்களையும் வழங்கும் வகையில் அந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
வாட்ஸ் - அப் நிறுவனர்களில் ஒருவரான பிரெய்ன் அடோன் இதில் முதலீடு செய்திருப்பதால், வருங்காலங்களில் நமது வாகனம் தொலைந்து விட்டாலோ, அல்லது கடத்தப்பட்டாலோ வீட்டிலிருந்தபடியே வாட்ஸ் - அப் வாயிலாக அதைக் கண்டுபிடிக்கக் கூட வாய்ப்புள்ளது.
பார்க்கலாம்... இத்தகைய முதலீடுகளால் நமது வாழ்க்கை முறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கூட உருவாகலாம்.


Click it and Unblock the Notifications








