நானோ கார் மாடலுக்கு புத்துயிர் கொடுக்க டாடா நிறுவனத்தின் பிளான் ‘பி’..!
டாடா நிறுவனம் நானோ காருக்கு மீண்டும் வாழ்வளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
நடுத்தரவர்க்கத்தினரின் கார் கணவை நனவாக்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய் விலை கொண்ட உலகின் மிகவும் குறைந்த விலை கொண்ட கார் என்ற அடையாளத்துடன் நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது மொத்த இந்தியாவையே அது திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் மிகையாகாது.

ஒரு லட்ச ரூபாயில் கார் என்றால் சும்மாவா? வெகு விரைவிலேயே மக்களிடம் வரவேற்பை பெற்றது நானோ.

மக்களிடம் அவை சென்றடையும் முன்பே இந்த காரை ஒரு லட்சம் விலையில் கொடுக்க ஒரு பக்கம் டாடா நிறுவனம் தடுமாறியது.

ஒரு லட்ச ரூபாய் என்ற விலையிலிருந்து மெல்ல மெல்ல நானோ காரின் விலை ஏற்றப்பட்டது. இதன் காரணமாக வெகு விரைவிலேயே மக்களின் நன்மதிப்பை இவை இழந்தன.

2008 முதல் விற்பனையில் உள்ள நானோ கார்கள் சமீப ஆண்டுகளாக விற்பனையில் சொதப்பி வருகிறது.

விற்பனையில் திணறும் நானோ கார் மாடலை நீக்க வேண்டும் என டாடா நிறுவனத்தின் அப்போதைய தலைமை பொறுப்பில் இருந்த சைரஸ் மேஸ்திரி கருத்து தெரிவித்தார் என்றும்.

சைரஸ் மிஸ்திரியின் இந்த கருத்து டாடா நிறுவனர் ரத்தன் டாடாவிற்கு பிடிக்காத காரணத்தினாலேயே தலைமை பொறுப்பில் இருந்து மிஸ்திரீ நீக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நானோ கார் மாடலை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் கைவிடப்போவதாக டாடா நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இருந்தாலும் நானோ என்ற பெயரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆவல் டாடா நிறுவனத்திற்கு இருந்து வருவது தற்போது வெளிப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபகாலமாக புதிய மாடல்களை உருவாக்கவும், நடப்பு மாடல்களை புதிய தோற்றத்தில் மேம்படுத்தவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் ஒன்றை மாடுலர் மோஃப்லெக்ஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் தான் இந்த புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட டாடாவின் முதல் ஸ்போர்ட்ஸ் மாடலான ரேஸ்மோ காரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டாடா நிறுவனம் உருவாக்கி வரும் இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு நானோ என்று பெயரிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதன் மூலம் நானோ கார் கைவிடப்பட்டாலும், அந்நிறுவனத்தின் நிறுவனரான ரத்தன் டாடாவின் விருப்பமான நானோ என்ற பிராண்டை தக்கவைத்துக்கொள்ள டாடா நிறுவனம் முயல்வது தெரியவருகிறது.

இந்தியாவின் முதல் உள்ளூர் எலக்ட்ரிக் கார் என்ற அடையாளம் பெற்றுள்ள மகிந்திரா நிறுவனத்தின் ஈ20 காருக்கு டாடா நிறுவனத்தின் புதிய கார் போட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தக்காரின் அறிமுகம் எப்போது என்பது குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த கார் முதல் முதலாக காட்சிப்படுத்தப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இதில் லித்தியம் அயன் பேட்டரிகள் பொறுத்தப்பட்டிருக்கும். எனவே இந்தக்கார்களில் மாசு உமிழ்வு முழுமையாக இருக்காது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இவை இருக்கும்.


Click it and Unblock the Notifications








