அராய் முடிவால் தடாலடியாக குறைந்த கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு!
கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவீட்டு முறையில் அராய் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்குமான இடைவெளி குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது அராய் அமைப்பு. புதிய விதிமுறைகளின்படி, கார்களின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் அளவில் பெரும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

காரின் வெற்று எடையின் அடிப்படையிலேயே இதுவரை கிரவுண்ட் கிளிரயன்ஸ் அளவு நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி காரின் நிகர எடையின் அடிப்படையில் கிரவுண்ட் கிளிரயன்ஸ் நிர்ணயிக்கப்படும் என்று அராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறையின்படி, பயணிகள் மற்றும் 90 சதவீத எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் காரின் நிகர எடை கணக்கில்கொள்ளப்பட்டு, அதன் பிறகுதான் கிரவுண்ட் கிளியரன்ஸ் கணக்கிட வேண்டும்.

உதாரணத்திற்கு சிறிய வகை கார்களில் 4 பெரியவர்கள் மற்றும் எரிபொருளுடன் சேர்த்து கிட்டத்தட்ட 400 கிலோ வரை காரின் எடை கூடும். இதனால், சஸ்பென்ஷன் அமைப்பு எடைக்கு தக்கவாறு கீழே இறங்கும்.

இதன்பிறகுதான் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு கணக்கிட வேண்டும் என்று அராய் அமைப்பு புதிய விதிமுறையில் கூறி இருக்கிறது. இதனால், பல கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

இதுவரை டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் வெற்று எடையின் அடிப்படையில் 225மிமீ தரை இடைவெளி கொண்டதாக குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், நிகர எடையின் அடிப்படையில் இந்த கார் இருக்கும்போது கிரவுண்ட் கிளிரயன்ஸ் 184 மிமீ என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இந்த அளவை இனி குறிப்பிட வேண்டும்.

இதேபோன்று, டிகுவான் எஸ்யூவியின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் வெளிநாடுகளில் 189 மிமீ ஆக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு 149 மிமீ என்ற அளவில் குறைந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 170மிமீ.,க்கும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்க வகை செய்யப்பட்டது. ஆனால், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் ஆக்சஸெரீகளை கொடுத்து காரின் தரை இடைவெளியை குறைத்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அராய் அமைப்பு மீண்டும் பழைய முறையிலேயே காரின் வெற்று எடையின் அடிப்படையில் கிரவுண்ட் கிளியரன்ஸ் கணக்கிடும் முறையை கொண்டு வந்தது. இந்த நிலையில், தற்போது காரின் எடையின் அடிப்படையில் கணக்கிடும் முறையை அறிவித்துள்ளது.

இந்திய சாலைகளில் கார்களுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. மோசமான சாலைகள், வேகத்தடைகள் உள்ளிட்ட இடங்களில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்கள் அவசியமாக உள்ளன. மேலும், காரின் அடிப்பாகத்தில் சிறிய கார்களால் ஏற்படும் சேதமும் குறைவாக இருக்கும்.

அராய் அறிவித்துள்ள புதிய விதிமுறை இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். இந்த புதிய விதிமுறையால் வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவிற்கும், இந்தியாவில் உள்ள அளவிற்கும் அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








