ஹெல்மெட் போடவில்லை என கூறி கார் ஓட்டுனருக்கு அபராதம் விதித்த திருச்சி போலீசார்!
ஹெல்மெட் போடவில்லை என கூறி கார் ஓட்டுனருக்கு போலீசார் அபராதம் விதித்த கூத்து திருச்சியில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சாலை விதிமீறல்களை தடுக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே.

கடந்த சில மாதங்களாக திருச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை திருச்சி கல்லணை அருகேயுள்ள வேங்கூர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சகாய ஜெயராஜ் என்பவரது காரை நிறுத்தி போலீசார் ஆய்வு செய்தனர். ஜெயராஜ் சீட் பெல்ட அணிந்திருந்தார். இதையடுத்து, அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். உடனடியாக, அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளார்.

ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஆவணங்கள் சரியாக இருந்தும், ரூ.100 அபராதம் போட்டுள்ளனர். மேலும், கார் ஓட்டி வந்த ஜெயராஜிடம் ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர்.

இந்த விஷயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விதிமீறல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் போலீசார் செய்யும் சில வேடிக்கையான, அடாவடியான நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் டாடா ஏஸ் ஓட்டுனரிடம் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி கோவை போலீசார் அபராதம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டியை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் தாக்கியதில், அவர் மண்டை உடைந்தது.

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது அந்த போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திருச்சியில் கார் ஓட்டுனர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்திருக்கும் விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








