அதிவிரைவு சாலைகளில் வேக வரம்பை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டம்!
அதிவிரைவு சாலைகளில் வேக வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டிலுள்ள அதிவிரைவு சாலைகளில் அதிகபட்ச வேகத்திற்கான வரம்பை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலுள் அதிவிரைவு சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதி இருக்கிறது. டெல்லியிலிருந்து ஆக்ராவை இணைக்கும் அதிவிரைவு சாலையில் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு விதிகள் உள்ளன. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்வதற்கு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை உயர்த்துவதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," தற்போது நெடுஞ்சாலைகளின் தரமும், கட்டமைப்பும் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. மறுபுறத்தில் வாகனங்களின் பாதுகாப்பும், தரமும் வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகத்தை உயர்த்துவதற்கு இது சரியான தருணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். இதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது 1,000 கிமீ தூரத்திற்கு புதிய விரைவு நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி- மீரட் மற்றும் கிழக்கு விரைவுசாலைகளில் இதற்கான பணிகளும் துவங்கிவிட்டன. திட்டமிடப்பட்டிருக்கும் பிற விரைவு சாலைகளிலும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறி இருக்கிறார்.

இதனிடையே, மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கும் செயல் குறித்து சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இது சாலை பாதுகாப்பில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலேயே மணிக்கு அதிகபட்சமாக 137 கிமீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. அங்கு சாலை அமைக்கும் நுட்பம் மற்றும் தரத்திற்கான பின்பற்றப்படும் நடைமுறைகள் சிறப்பானவையாக இருக்கின்றன.

ஆனால், இந்தியாவில் மிக மோசமான சாலை கட்டமைப்புகளால்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, அதிகபட்ச வேகத்தை நிர்ணயம் செய்வது குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 44 சதவீதம் அதிவேகத்தால் ஏற்பட்டவை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் அரசு நிதானமாக யோசித்து முடிவு செய்வது அவசியம் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

விரைவு சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் அதிகபட்ச வேகத்தை உயர்த்துவது சிறந்த விஷயம்தான். ஆனால், அதற்கு தகுந்த கட்டமைப்புகளையும், பாதுகாப்பு அம்சங்களையு் நம் நாட்டு சாலைகள் பெற்றிருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








