சென்னை இசிஆர் சாலையில் கார் ரேஸ்: ரூ.30 கோடி மதிப்புடைய சூப்பர் கார்கள் பறிமுதல்!
சென்னையில் கார் பந்தயம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய சூப்பர் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கார் ரேஸ் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் சென்னையை சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக அவர்களது விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வார இறுதி விடுமுறை தினங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளில் இளைஞர்கள் பந்தயம் கட்டி ரேஸ் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு, நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் அதிவேகத்தில் பறந்தன.

இந்த நிலையில், அக்கரை என்ற இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அதிவேகத்தில் வந்த சூப்பர் கார்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், அந்த கார்கள் நிற்காமல் சென்றதுடன், போலீஸ்காரர் ஒருவரின் காலின் மீது ஏற்றிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து, வயர்லெஸ் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தாண்டி சோதனைச் சாவடியில் அந்த கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும், அதிவேகத்தில் சென்றது, அச்சுறுத்தும் வகையில் கார்களை ஓட்டியதற்காக சூப்பர் கார்களில் வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், ரேஸில் பயன்படுத்தப்பட்ட 10 சூப்பர் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு கானாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி, ஆடி உள்ளிட்ட பல நிறுவனங்களின் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் இதில் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. அவற்றின் மதிப்பு ரூ.30 கோடி என தெரிகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, கிழக்கு கடற்கரை சாலையில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சூப்பர் கார்களில் வந்தவர்கள் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த சூப்பர் கார்கள் மிதமான வேகத்தில் சென்றாலே, அதன் சப்தம் அலாதியாக இருக்கும். அதனை தவறாக புரிந்து கொண்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் ரேஸ் நடத்தியவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
Photo Credit: Ruben

மேலும், பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் 'பெட்' கட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. யார் இலக்கை முதலில் அடைகிறார்களோ அவர்களுக்கு பல லட்சம் பரிசு காத்திருந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதுதான், அவர்கள் காரை வேகமாக செலுத்தியதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் பந்தயத்தில் ஈடுபடவில்லை என்று சூப்பர் கார்கள் வந்தவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Photo Credit: Ruben

எனினும், போலீஸ்காரர் ஒருவரின் மீது ரேஸில் ஈடுபட்ட சூப்பர் கார் ஒன்று இடித்து சென்றதாகவும், அதனால்தான் போலீசார் இந்தளவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே சாமானியர்கள் மீது இடித்து இருந்தால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Photo Credit: Ruben

வார இறுதி விடுமுறை நாட்களில் சென்னை இசிஆர் சாலையில் இதுபோன்ற பந்தயங்களால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், இந்த சாலையில் செல்வதற்கே அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்களை அடுக்குகின்றனர்.
Photo Credit: Ruben

இதுபோன்ற பந்தயங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்த வேண்டும் என்பதுடன், ரேஸ்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை இசிஆர் சாலையில் கார் ரேஸில் பயன்படுத்தப்பட்ட சூப்பர் கார்கள் - வீடியோ!
Photo Credit: TOI, Deccan Chronicle, Facebook And Ruben
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








