ஜனவரி முதல் சென்னையில் பேட்டரியில் இயங்கும் பஸ்கள் அறிமுகமாகிறது!
வரும் ஜனவரி முதல் சென்னையில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்கள் பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அதிகரித்து வரும் வாகனங்களால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. வாகன புகையிலிருந்து வெளியேறு நச்சுத்தன்மை வாய்ந்த புகை காரணமாக சுற்றுச்சூழல் வெகுவாக சீர்கெட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை இயக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. அதன்படி, வரும் ஜனவரி முதல் சென்னையில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளது.

முதல்கட்டமாக 250 மின்சார பஸ்களை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்ட முறை வெற்றி பெறும் பட்சத்தில், அதிக அளவில் மின்சார பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தியாகராய நகர், தாம்பரம் மற்றும் பிராட்வே உள்ளிட்ட இடங்களில இருந்து இந்த மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, சென்னை நகரின் பெரும்பாலான தடங்களில் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்த மின்சார பஸ்கள் ஒவ்வொன்றிலும் மூன்று தொகுப்பு பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்யும்போது, 50 கிமீ தூரம் வரை இந்த பஸ்கள் செல்ல முடியும்.

இந்த பஸ்களுக்கான பேட்டரி சார்ஜ் நிலையங்கள் பணிமனைகளில் அமைக்கப்படுகிறது. மேலும், பேருந்து நிலையங்களிலும் பேட்டரி சார்ஜ் ஏற்றும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த பஸ்களில் ஜிபிஎஸ் வசதி, 2 சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். இவை தாழ்தள பேருந்துகளாகவும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video


இதன்மூலமாக டீசலில் இயங்கும் மாநகர பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்படும். இதனால், மாநகர பேருந்துகளால் வெளியிடப்படும் நச்சுப்புகை அளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பேட்டரியில் இயங்கும் பஸ்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே கருதப்படுகிறது. அதிக அளவில் மின்சார பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் இந்த சூழலில் அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications








