மறந்துடாதீங்க... செப்டம்பர் முதல் கையில் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்!
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் கொண்டு வருவது அவசியம் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கு கொண்டார்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்," சாலை விபத்துக்களை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறோம். சாலை விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்காக சிக்னல் ஜம்ப் செய்தவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குற்றங்களின் பேரில், 9,500 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video


இந்த கடுமையான நடவடிக்கைகளால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், விதிமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும் என்று நம்புகிறோம்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் விபத்துக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விபத்துக்களை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக, வரும் செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்து வருவது கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலமாக, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு கிடைக்கும்.

போலி ஓட்டுனர் உரிமங்களை வைத்திருப்போரையும் எளிதாக கண்டுபிடிக்க இயலும். மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் விதத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை அதிக அளவில் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இதற்காக பி.ஓய்.டி நிறுவனத்தின் பேட்டரி பஸ் சோதனை ஓட்டம் துவங்கப்படுகிறது. இந்த பஸ் மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த பஸ்சில் வைஃபை இணைய வசதி, மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஏறி, இறங்குவதற்கான படிக்கட்டு வசதி, குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும்.

இந்த பஸ் ஒரு மாதத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, அதற்கு தக்கவாறு பஸ்சில் மாறுதல்கள் செய்த பிறகு, இந்த மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற மின்சார பஸ்களை இயக்குவதற்கு திட்டம் வைத்துள்ளோம். இதற்காக 200 மின்சார பஸ்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறோம்," என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








