இந்திய மின்சார வாகன கொள்கை விரைவில் அறிமுகம்; முழு தகவல்கள்
மின்சார வாகன பயன்பாட்டை இந்தியாவில் ஊக்குவிக்க நினைக்கும் மத்திய அரசு, அதற்கான வாகன கொள்கையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக மின்சார வாகனங்களுக்கான வாகன கொள்கையை வரும் டிசம்பரில் இந்திய அரசு வெளியிடுகிறது.

இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வரும் வேளையில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தை வாகனங்களுக்கான ஆற்றலாக மாற்ற பல்வேறு முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சீனா, ஜப்பான், ஃபிரான்ஸ், அமெரிக்காவின் சில பகுதிகள் என பெரும்பாலான நாடுகளில் மின்சாரத்தை வாகனங்களுக்கான ஆற்றலாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் இந்தியாவும் இணையவுள்ளது. அதன்படி, விரைவில் இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டிற்கான காலம் உதயமாகவுள்ளது.

இந்தியர்களிடம் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், வாகனங்களாக் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் மின்சார வாகன கொள்கையை இந்திய அரசு உருவாக்கவுள்ளது.

இதற்கான சட்டவிதிகள் வரையறுக்கப்பட்டு, சபாநாயகர் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின்சார வாகனங்களுக்கான கொள்கை வெளியிடப்படும் என சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அமல்படுத்துவது குறித்து நித்தி அயோக் ஆணைக்குழு பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது, அக்குழுவின் பரிந்துரைப்படியே கொள்கைகள் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் மின்சார வாகன கொள்கையில் இடம்பெற வாய்ப்பு இருக்கக்கூடிய முக்கிய அம்சங்கள்
- பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை குறைக்க திட்டம்.
- மின்சார வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்க திட்டம்.
- மின்சார வாகனங்களின் செயல்பாடுகள் குறித்த விளக்கம்.
- பேட்டரிகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்க திட்டம்.

மின்சார வாகன சந்தையை இந்தியாவில் உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்நிறுவனங்கள் அதற்கான கட்டமைப்பை இந்தியளவில் உருவாக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.
கார், பைக் மட்டுமில்லாமல் கனரக வாகனங்களும் மின்சார ஆற்றலால் இயங்கக்கூடிய அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும். அதனால் மத்திய அரசு உருவாக்கி வரும் மின்சார வாகன கொள்கையில் கனரக வாகனங்களும் அடங்கும்.

வரும் மே 26 முதல் மின்சார வாகன பயன்பாட்டிற்கான சோதனையை இந்திய அரசு கால் டாக்ஸி சேவையின் மூலம் நாக்பூரில் தொடங்குகிறது.
இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து மின்சார வாகன பயன்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

2030ம் ஆண்டிற்குள் இந்தியா பெட்ரோல், டீசல்களில் சார்ந்திருக்ககூடிய நிலையை களைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் மின்சார வாகன பயன்பாட்டிற்கு இந்தியாவில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை திறன் மிகவும் கீழ் நிலையில் தான் உள்ளது. அதிக விலையில் விற்கும் பேட்டரிகள் மற்றும் கட்டமைப்பில் உள்ள குறைபாடே அதற்கு காரணம்.
இதை இந்திய அரசு நன்கு உணர்ந்துள்ளது. விரைவில் வரையறுக்கப்படவுள்ள மின்சார வாகன கொள்கையின் மூலம் இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








