க்ராஷ் டெஸ்ட்டில் 'ஸீரோ' வாங்கி செவர்லே என்ஜாய்... அசத்திய ஃபோர்டு ஆஸ்பயர்!
Read in Tamil: Global NCAP Crash Test: Ford Aspire Gets 3 Star Rating, Chevy Enjoy Fails.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் பல பிரபல கார் மாடல்களை க்ராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தி ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. இதில், வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்கள் பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தை பெற்று அதிர்ச்சி தந்தன.
இந்த நிலையில், இந்தியாவில் தயாராகும் செவர்லே என்ஜாய் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. அதன் முடிவுகளை தொடர்ந்து காணலாம்.

மணிக்கு 64 கிமீ வேகத்தில் காரின் முன்பகுதியை தடுப்பு மீது மோதி சோதனை செய்யப்பட்டது. காரின் கட்டுமானத் தரம், பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை மனித பொம்மைகளை வைத்து சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் செவர்லே என்ஜாய் கார் ஒரு புள்ளி கூட பெறாமல் பூஜ்யத்தை பெற்றது. ஃபோர்டு ஆஸ்பயர் கார் 5க்கு 3 என்ற மதிப்பீட்டை பெற்றது.

ஏர்பேக்குகள் பொருத்தப்படாத செவர்லே என்ஜாய் காரின் பேஸ் மாடல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது, செவர்லே என்ஜாய் காரில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரம் மிக மோசமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், ஒரு புள்ளிகூட செவர்லே என்ஜாய் பெறவில்லை. அதேநேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திர தர மதீப்பீட்டை பெற்றது.

அதேநேரத்தில், ஃபோர்டு ஆஸ்பயர் கார் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இரண்டு ஏர்பேக்குகளுடன் விற்பனை செய்யப்படும் ஃபோர்டு ஆஸ்பயர் காரின் பேஸ் மாடல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் அதிகபட்சமான 5க்கு 3 என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் கட்டுமானத் தரமும் சிறப்பாக இருப்பதும், மோதலின்போது உள்ளே இருப்பவர்களுக்கான பாதிப்பு குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்ட் மாடல் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. எனவே, இந்த செக்மென்ட்டில் மிகச் சிறந்த பாதுகாப்பு கார்களில் ஒன்றாக ஃபோர்டு ஆஸ்பயர் மாறி இருக்கிறது.

குளோபல் என்சிஏபி அமைப்பு இந்திய கார்களின் பாதுகாப்பு தரம் குறித்து கடுமையாக விமர்சித்தது. இதையடுத்து, சில கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் பேஸ் மாடல்களில் ஏர்பேக்குகளை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கத் துவங்கின. ஃபோர்டு, டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார் நிறுவனங்கள் கார்களின் பேஸ் மாடல்களில் ஏர்பேக்குகளை நிரந்தர அம்சமாக கொடுத்து வருகின்றன.

ஆனால், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னமும் தங்களது கார்களில் ஏர்பேக் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகளை சேர்க்காமல் இருப்பது ஏமாற்றம் தரும் விஷயமாகவே உள்ளது. அதேபோன்று, காரின் கட்டுமானமும் மிக மோசமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து இந்தியாவில் அனைத்து கார்களுக்கும் க்ராஷ் டெஸ்ட் சோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது. க்ராஷ் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே, விற்பனைக்கு அனுமதிக்கப்படும். எனவே, கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை கார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் படங்கள்!
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








