கூடுதல் வரியால் எஸ்யூவி, சொகுசு கார்கள் விலை தடாலடியாக உயர்கிறது!
கார்களுக்கான செஸ் வரியின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி விதிவிதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நாடுமுழுவதும் இருந்த பல்முனை வரி விதிப்பு முறையை ஒழித்துக் கட்டி, ஒருமுனை வரிவிதிப்பு முறையை கடைபிடிக்கும் விதத்தில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், கார்களுக்கு அதிகபட்சமான 28 சதவீத வரி அறிவிக்கப்பட்டது. எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களுக்கான செஸ் வரி கணிசமாக குறைந்ததால், கார்களின் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சிறிய கார்களின் விலையில் அதிக மாற்றம் ஏற்படாத நிலையில், எஸ்யூவி, செடான் கார்களின் விலை தடாலடியாக குறைந்தது.

எஸ்யூவி வகை கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும், சொகுசு கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் குறைந்தது. இது சொகுசு கார் மற்றும் எஸ்யூவி வகை கார்களை வாங்க முடிவு செய்திருந்தோருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில், சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்தது. அதன்படி, அண்மையில் சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கான செஸ் வரிக்கான உச்சவரம்பை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் கொடுத்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான சட்ட வரையறை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம்[CBEC] புதிய செஸ் வரி உயர்வுக்கான அறிவிக்கையை வெளியிடும்.

அதிகபட்சமாக கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும், 15 சதவீத செஸ் வரியும் சேர்த்து 43 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதிய சட்டம் அமலுக்கு வரும்போது, அதிகபட்சமாக சொகுசு மற்றும் எஸ்யூவி கார்களுக்கான வரி 53 சதவீதம் என்ற அளவிற்கு உயரும்.

புதிய வரியின்படி, அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 25 சதவீத செஸ் வரி விதிக்கப்படாது. ரூ.20 லட்சத்திற்கும் மேல் விலை கொண்ட கார்களுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து அதிகபட்சமாக 25 சதவீத செஸ் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மிட்சைஸ் செடான் கார்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது.

இதனால், எஸ்யூவி கார்களின் விலை அதிகரிக்க இருக்கிறது. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு செஸ் வரி 10 சதவீதம் கூடுதலாக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதற்குள் எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களை வாங்குவது சாலச் சிறந்ததாக இருக்கும். இல்லையெனில், கணிசமான விலை உயர்வை எதிர்கொள்ளும் சூழல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








