ஜிஎஸ்டி வரி எதிரொலி: கார், பைக்குகளுக்கு அதிரடி தள்ளுபடி!
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதன் எதிரொலியாக இருப்பில் உள்ள கார், பைக்குகளை விற்பனை செய்வதற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், கார் மற்றும் பைக்குகளுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி
மாருதி கார் நிறுவனம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. அதிகபட்சமாக ஆல்ட்டோ காருக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பில் உள்ள கார்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்னதாக விற்பனை செய்வதற்கு இந்த தள்ளுபடியை வழங்குகிறது.

ஹூண்டாய் மோட்டார்ஸ்
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. எலைட் ஐ20 காருக்கு ரூ.25,000 வரையிலும், சான்டா ஃபீ எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா
ஹோண்டா கார் நிறுவனம் தனது பிரியோ காருக்கு ரூ.14,500 தள்ளுபடியும், அமேஸ் காருக்கு ரூ.17,000 வரையிலும், ஜாஸ் காருக்கு ரூ.60,000 வரையிலும் வழங்கப்படுகிறது.
பிஆர்வி காருக்கும் ரூ.60,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஜுன் 10 முதல் ஜூன் 30 வரை கார் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியால் விலையேற்ற பாதிப்பு இல்லாமல் டெலிவிரி கொடுப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு
ஃபோர்டு கார் நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரூ.30,000 வரையில் சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது.
ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களுக்கு ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் பலனை வாடிக்கையாளர்களுக்கு தருவதாகவும் ஃபோர்டு தெரிவிக்கிறது. இதனால், ரூ.25,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது.

நிஸான்
நிஸான் கார்களுக்கும் சிறந்த தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது. டெரானோ எஸ்யூவிக்கு ரூ.80,000 வரையிலும், மைக்ரா காருக்கு ரூ.25,000 வரையிலும் தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

சொகுசு கார்கள்
சொகுசு கார் பிரிவில் ஆடி கார் நிறுவனம் ரூ.10 லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜிஎஸ்டி வரி காரணமாக ஏற்படும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ.7 லட்சம் வரை விலை குறைப்பு செய்வதாக தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.10.9 லட்சம் வரை விலை குறைப்பு செய்துள்ளது.

பைக் விலை
மறுபுறத்தில் பைக் நிறுவனங்களும் விலை குறைப்பு மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளன. பஜாஜ் நிறுவனம் தனது மாடல்களின் விலையை ரூ.4,500 வரை குறைத்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் விலை குறைப்பு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், சக்திவாய்ந்த பைக்குகளின் மீதான செஸ் வரி நீக்கப்படுவதால், அதன் விலையும் குறையும் நிலை இருக்கிறது.

பெரிய வகை கார்கள் மீது அதிகபட்சமான தள்ளுபடி கிடைத்தால் கார் வாங்கும் முடிவை ஒத்திப்போட வேண்டியதில்லை. அதேநேரத்தில், டீலர்களில் எதிர்பார்த்த அளவு சலுகை இல்லையெனில், அவசரப்படாமல் நீங்கள் திட்டமிட்ட காலத்தில் வாங்குவது நல்லது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்த பின்னர் சிறிய கார்களின் விலை 3 முதல் 5 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ரூ.5 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை விலை உயரலாம்.

மற்றொரு விஷயத்தையும் இங்கே பார்க்க வேண்டும். பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார் வாங்குவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
அதாவது, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் பழைய கார்களுக்கான வரி அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இப்போதே எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வது நல்லது என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ்யூவி மற்றும் சொகுசு கார்கள் விலை 1.5 முதல் 4.5 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.50,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








