ஜிஎஸ்டி வரியால் சொகுசு கார்கள் விலை குறைகிறது.... டிராக்டர் விலை உயர்கிறது!
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் சொகுசு கார் விலை குறையும் வாய்ப்பு உள்ள நிலையில், டிராக்டர் விலை உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
வரும் ஜூலை 1 முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி[ஜிஎஸ்டி] என்ற புதிய ஒரு முனை வரிவிதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய வரிவிதிப்பு முறைக்கு பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, சொகுசு கார்கள் மீதான வரி வெகுவாக குறைகிறது. இதனால், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளன. அதேநேரத்தில், சிறிய கார்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் டிராக்டர்கள் மீதான வரி அதிகரித்துள்ளது.

சிறிய கார்கள் விலை ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, ஹைப்ரிட் கார்களின் விலையும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று வந்த தகவலின்படி, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் டிராக்டர் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிராக்டர்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது குறைந்தபட்சமாக கருதி சந்தோஷப்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், டிராக்டர் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீது 28 சதவீதம் என்ற அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால், டிராக்டர்கள் உற்பத்தி செலவு உயரும் என்பதால் டிராக்டர்கள் விலை ஜிஎஸ்டி வரியால் மறைமுகமாக உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி வரி காரணமாக டிராக்டர்கள் விலை ரூ.25,000 வரை உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டிராக்டர் உதிரிபாகங்களுக்கு விதிக்கப்பட இருக்கும் 28 சதவீத வரி விதிப்பை 18 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்குமாறு டிராக்டர் தயாரிப்பாளர் கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டாஃபே டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன்," துரதிருஷ்டவசமாக ஜிஎஸ்டி வரியால் டிராக்டர்களின் உற்பத்தி செலவீனம் அதிகரிக்கும். இதனால், டிராக்டர் விலை உயரும்," என்று கூறி இருக்கிறார்.

ஜிஎஸ்டி வரியால் சொகுசு கார்களை வாங்குவோர் பலன் அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஹைப்ரிட் கார்களை வாங்குவோர், டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

ஆட் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் டிராக்டர் போன்ற எந்திரங்களை வைத்து விவசாயிகள் சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில், டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கூடுதல் சுமையை ஏற்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications








