ஐ10க்கு விடைகொடுத்து சான்ட்ரோ காரை மீண்டும் கொண்டு வருகிறது ஹூண்டாய்
கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஐ10 கார்கள் மக்களிடம் வரவேற்பில் இல்லை என்பதை புரிந்துகொண்ட ஹூண்டாய் நிறுவனம், இனி ஐ10 கார்களின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது
ஹேட்ச்பேக் மாடல் கார்களில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை ஈட்டிதந்த ஐ10 காரின் உற்பத்தியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபமாக ஐ10 கார்கள் விற்பனையில் சொதப்பி வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஹீண்டாய் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2008ம் ஆண்டு ஐ10 மாடலை இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது, அந்த காலகட்டங்களில் நல்ல விற்பனையான ஐ10 கார்கள் சமீபமாக வாடியாக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. அதேநேரத்தில், ஐ10 கார்களின் அப்டேட் வெர்ஷனாக வெளியான கிராண்ட் ஐ10 கார் விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது.

இனி வரும் நாட்களில் ப்ரீமியம் தரத்தில் உருவாக்கப்படக்கூடிய கார்களுக்கு மட்டுமே மக்களிடம் அதிக வரவேற்பு இருக்குமென்பதால், ஹூண்டாய் நிறுவனம் ஐ10 மாடல் கார்களின் உற்பத்தியை நிறுத்த இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐ10 மாடல் கார்களின் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்த முடிவுசெய்திருந்தாலும், அதற்கு மாற்றாக அந்நிறுவனம் வெளியிடவுள்ள மற்றொரு கார் சாண்ட்ரோ. பழைய மாடல் சான்ட்ரோ காராக இல்லாமல், புதிய சாண்ட்ரோ கார்கள் முற்றிலும் அப்டேட் செய்யப்பட்டு தயாராகவுள்ளதாக ஹூண்டாயின் இந்தியக் கிளை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

சாண்ட்ரோ ஸிங் கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் 62 பிஎச்பி பவரை தரும் 1.1 லிட்டர் எஞ்சின் மற்றும் பழைய சான்ட்ரோ காரில் இடம்பெற்றிருந்த தானாக இயங்கக்கூடிய 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு புதிய சான்ட்ரோ கார் தயாரிக்கப்படலாம் என நமக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக புதிய சான்ட்ரோ காரில் ஐ10 காரில் இடம்பெற்றிருந்த தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்மெண்ட் வசதி வடிவமைக்கபடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கார் இந்திய மக்களின் வாங்கும் திறன் கருதி தற்போதைக்கு டீசல் எஞ்சினில் உருவாக்கப்படாது என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. மேலும் ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ முற்றிலும் இந்திய மார்கெட்டை மையப்படுத்தி மட்டுமே வடிவமைக்கபடவுள்ளது.

பவர், செயல் திறன் போன்றவற்றை மட்டும் கொண்டு இந்த காரை உருவாக்காமல், பாதுகாப்பு , வண்டியை ஓட்டுபவர்களின் கவனத்தை திசைதிருப்ப முடியாத தொழில்நுட்பங்களை கொண்டும் புதிய சான்ட்ரோ காரை ஹீண்டாய் உருவாக்கவுள்ளது.

இதன்மூலம் ஐ10, ஐ10 கிரேண்ட் மற்றும் ஐ20 கார்களிலிருந்த சிறந்த செயல்திறன்களை வைத்து புதிய அப்டேட் சான்ட்ரோவை ஹூண்டாய் உருவாகவுள்ளது நமக்கு தெரியவருகிறது. 2018ம் ஆண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டும் ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ கார், அதே ஆண்டில் வெளியாகும் மாருதி சுசிகியின் புதிய வேகன் ஆர் காருக்கு போட்டியாக விற்பனையில் களமிறங்குகிறது.
இந்தியாவில் அடுத்து எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள மாருதி சுசிகி தயாரிப்பான புதிய ஸ்விஃப்ட் கார்களின் புகைப்பட தொகுப்பை கீழே காணுங்கள்


Click it and Unblock the Notifications








