நாக்பூர் நகரத்தில் விரைவில் மின்சார கார் கால் டாக்ஸி சேவை... மத்திய அரசு அறிவிப்பு...!
மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு இன்று உலகளவில் எழுந்து வரும் வரவேற்பு விரைவில் இந்தியாவிலும் பிரதிபலிக்கவுள்ளது.
இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் கார் டாக்ஸி சேவையை மத்திய அரசு நாக்பூரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் 26ம் தேதி முதல் நாக்பூர் நகரில் கிட்டத்தட்ட 200 மின்சார கால் டாக்ஸி கார்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களின் ஆற்றல் மின்சாரத்திற்கு மாற்றப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதன்படி இந்தியாவில் முதல் மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸி சேவையை பெறும் நாக்பூர் நகரம் பெறவுள்ளது.

இந்தியாவில் பாஜக பொறுப்பேற்று வரும் 26ம் தேதியோடு மூன்றாண்டுகள் முடியவுள்ளதை அடுத்து இத்திட்டம் நாக்பூர் நகரில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இத்திடத்திற்காக மின்சாரத்தால் இயங்கும் 200 கார்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், மின்சார கார் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு எப்போதே எண்ணியிருந்ததாகவும், ஆனால் அதற்கான சார்ஜிங் நிலையங்கள் போன்ற கட்டமைப்பை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

200 கார்களுக்கான சோதனை ஒட்டம் முன்பே நாக்பூர் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் ஈ-வெரிட்டோ மற்றும் ஈ-20 பிளஸ் கார்கள் தான் டாக்ஸிக்காக இயக்கப்படவுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சட்டவிதிகளின் படி எஞ்சின் அல்லாத கார்களை கமர்ஷியல் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த நிலையில் மத்தியரசு மின்சார கார்களை அங்கே அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த நிலை அங்கே தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் மின்சார மோட்டார்களை வைத்து இயக்கப்படக்கூடிய கார்களை மஹாராஷ்டிராவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

இருந்தாலும் இதனை களைய தற்போது மத்தியரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இந்த திட்டங்களுக்கு மஹாராஷ்டிரா அரசு நிச்சயம் ஒத்துழைக்கும் எனவும் மத்திய அரசு கருதுகிறது.


Click it and Unblock the Notifications








