சூரியசக்தி மூலமாக எலக்ட்ரிக் கார்களை இயக்கும் நுட்பம்: இஸ்ரோ அறிமுகம்!சூரியசக்தியில் இயங்கும் மின்சா
சூரிய சக்தி மின்சாரத்தை பெற்று இயங்கும் மின்சார கார் தொழில்நுட்பத்தை இஸ்ரோ அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
உலகிலேயே மிக குறைவான செலவில் ராக்கெட்டுக்களை ஒன்றன் பின் ஒன்றாக விண்ணில் செலுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது இஸ்ரோ அமைப்பு. இந்த நிலையில், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருள் பிரச்னையை தவிர்ப்பதற்கான புதிய பேட்டரி கார் தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

ஆம். எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டு, சுற்றுச்சூழலை தவிர்க்க பேட்டரியில் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்கள்தான் சிறந்த போக்குவரத்து தீர்வாக கருதப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக, மின்சார காருக்கான புதிய தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

அதாவது, மின்சார கார்களின் பேட்டரிக்கான மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலமாக பெறுவதற்கான தொழில்நுட்பமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் கூரையில் பொருத்தப்பட்டு இருக்கும் சோலார் பேனல்கள் மூலமாக, மின்சார காரின் பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.

தற்போது இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதாகவும், அதிக செலவு பிடிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. ஆனால், இதனை மிக குறைவான விலையில் உருவாக்குவதற்கான முயற்சியில்தான் இஸ்ரோ இறங்கி உள்ளது.

அனல்மின்சாரம், அணு மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்யும்போது கழிவுப்பொருட்கள் வெளியேறுவதோடு, அதுவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதாக இருக்கிறது. ஆனால், சூரிய மின்சக்தியிலிருந்து பெறப்படும் மின்சாரம் உற்பத்தி செலவு குறைவு என்பதுடன், கழிவுப்பொருட்கள் பிரச்னையும் இல்லை.

எனவே, இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது. அண்மையில் மாருதி ஓம்னி மினி வேன் ஒன்றில் சோலார் பேனல்களை பொருத்தி, அதற்கு தேவையான உப கருவிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தி சோதனை செய்தது.

இந்த சோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மின்சார கார்களில் மிகப்பெரிய நடைமுறை பிரச்னை, சார்ஜ் தீர்ந்துவிட்டால் சிக்கலாகிவிடும். அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

ஆனால், சோலார் பேனல்கள் மூலமாக சூரிய மின்சாரம் பெறப்படுவதால், கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே பேட்டரி சார்ஜ் ஆகி கொண்டிருக்கும். இதனால், நீண்ட தூர பயணங்களும் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.

அடுத்த கட்டமாக, இந்த புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, செலவீனத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சொந்தமாக அதிக திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி மற்றும் ஃப்யூவல் செல்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








