அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இல்லாவிட்டால் அபராதம், சிறை தண்டனை: போலீஸ் எச்சரிக்கை!
வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டன
சாலை விபத்துக்களை குறைக்கவும், போலி ஓட்டுனர் உரிமத்திற்கு முடிவு கட்டுவதற்கும் வரும் 1ந் தேதி முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கையில் எடுத்து வைத்திருப்பது கட்டாயம் என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது நல மனுவை தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரி இருந்தார்.

தனது மனுவில் வாடகை கார் ஓட்டும் பலரும் தாங்கள் பணிபுரியும் வாகன உரிமையாளர் அல்லது நிறுவனத்திடம் அசல் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்துள்ளனர். அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்லும்போது தொலைந்துவிட்டால், நகல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு டிராஃபிக் ராமசாமி கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு தொடர்பாக நடந்த விசாரணையின்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறினார்.

மேலும், தமிழக அரசு அறிவித்தது போன்று கையில் அசல் ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்வது அவசியம் என்பதையும் உறுதி செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சென்னை பெருநகர் காவல்துறையின் சார்பில் இந்த புதிய விதிமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்ப்டடு இருக்கிறது. அதில், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது.

அந்த சட்டத்தின்படி, பொது இடத்தில் வாகனம் ஓட்டுவோரிடம் தணிக்கையின்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை சீருடையில் உள்ள காவல்துறை அதிகாரி கேட்டால் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181-ன் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவோருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம், இல்லையெனில், இரண்டையுமே சேர்த்து விதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே, சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு உச்ச நீதிமன்றக் குழு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது தமிழக அரசும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








