2 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தும் ஜீப் நிறுவனம்!
புதிய காம்பஸ் எஸ்யூவியை தொடர்ந்து, இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜீப் கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜீப் கார் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்யூவி தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் பாரம்பரியம் மிக்கது. தற்போது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இரண்டு விலை உயர்ந்த எஸ்யூவி மாடல்களுடன் இந்திய சந்தையில் களமிறங்கியது.

ஆனால், அவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், போட்டியாளர்களைவிட விலை மிக அதிகம் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் என்ற புதிய எஸ்யூவியை அந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், விலை மிக சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசைனும் மிகச் சிறப்பாக இருப்பதால் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியை தொடர்ந்து அடுத்து இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதில், 526 என்ற குறியீட்டுப் பெயரில் ரெனிகேட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஜீபப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு இந்த எஸ்யூவி போட்டியாக இருக்கும். 2019ம் ஆண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கடுத்து, 515 என்ற பெயரில் மற்றுமொரு புத்தம் புதிய எஸ்யூவி மாடலையும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு தகுந்த அம்சங்களுடன் ஜீப் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த எஸ்யூவி தயாரிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே, எஞ்சினையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அரசின் வரிச்சலுகையை பெறும் விதத்தில் தனது 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை 1.5 லிட்டர் எஞ்சினாக மாற்றம் செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்வதற்கும் அந்த நிறுவனத்திடம் திட்டம் உள்ளது.

ஜீப் காம்பஸ் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்து இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களையும் அறிமுகம் செய்வதில் ஜீப் நிறுவனம் நிச்சயம் ஆர்வம் காட்டும். அதுமட்டுமின்றி, ஃபியட் நிறுவனத்தின் கார் விற்பனை படுமோசமாகிவிட்ட நிலையில், இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரையில், தற்போது ஜீப் கையில்தான் ஃபியட் நிறுவனத்தின் எதிர்காலம் இருப்பதாக சொல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








