மஹிந்திரா இ- ஆல்ஃபா எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம்- விபரம்!
பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார ஆட்டோரிக்ஷா மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மின்சார வாகனங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்த மார்க்கெட்டில் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
பேட்டரியில் இயங்கும் கார், இலகு வகை வர்த்தக வாகனங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது பேட்டரியில் இயங்கும் மின்சார ஆட்டோரிக்ஷா மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா இ- ஆல்ஃபா என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஆட்டோரிக்ஷாவில் ஓட்டுனர் மற்றும் 4 பயணிகள் செல்ல முடியும். மிகச் சிறப்பான இடவசதியுடன், அட்டகாசமான வடிவமைப்பில் இந்த மின்சார ஆட்டோரிக்ஷா மாடல் வந்துள்ளது.

நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏதுவான அம்சங்களுடன் இந்த மின்சார ஆட்டோரிக்ஷா மாடலை மஹிந்திரா தயாரித்துள்ளது. சிறப்பான சஸ்பென்ஷன், அதிர்வுகள் இல்லாத சுகமான பயண போக்குவரத்தை நகர்ப்புறத்தில் வழங்கும்.

இந்த மின்சார ஆட்டோரிக்ஷாவில் 120Ah திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார ஆட்டோரிக்ஷாவில் சக்திவாய்ந்த மின் மோட்டாரும், சிறப்பான கட்டுப்பாட்டு அமைப்பும் உள்ளது.

ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்யும ்பட்சத்தில், இந்த ஆட்டோரிக்ஷா 85 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும்.

முதல்கட்டமாக தலைநகர் டெல்லியை உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்து, கொல்கத்தா, லக்ணோ உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. படிப்படியாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ரூ.1.12 லட்சம் என்ற மிக சவாலான விலையில் இந்த புதிய மின்சார ஆட்டோரிக்ஷாவை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புகை வெளிப்படுத்தாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாக வந்துள்ளது.

குறைந்த முன்பணத்துடன் கடன் வசதி, எளிய மாதத் தவணை திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டி, ஒரு பேட்டரியை இலவசமாக மாற்றித் தரப்படுவது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களுடன் இந்த புதிய மஹிந்திரா இ- ஆல்ஃபா ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








