புதிய மஹிந்திரா ஏரோ எலக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுகம் உறுதியானது!
மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ காரின் மின்சார மாடல் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மின்சார கார் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் படு தீவிரம் காட்ட துவங்கி இருக்கிறது. அடுத்த இரு ஆண்டுகளில் 6 புதிய மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறது.

இதில், மஹிந்திரா கேயூவி100, ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளின் மின்சார மாடல்கள் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர்த்து, 3 அதி செயல்திறன் மிக்க மின்சார கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா அதிகாரி கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ எஸ்யூவியின் மின்சார மாடல் வருவது உறுதியாகி இருக்கிறது. ஆட்டோகார் புரோஃபஷனல் தளம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் கூபே ரக எஸ்யூவி மாடலாக இது டிசைன் செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் இந்த கான்செப்ட் கார் மாடல் வெகுவாக கவர்ந்தது.

மேலும், இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் திடீரென இந்த எஸ்யூவியின் மின்சார மாடலை களமிறக்க மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.
Recommended Video


இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட இருக்கும் மின்மோட்டார் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறனுடன் வர இருக்கிறது.

இந்த எஸ்யூவியின் மின்மோட்டார் வெறும் 8 வினாடிகளில்0 - 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட அதிசெயல்திறன் வாய்ந்த மாடலாக இருக்கும்.

இந்த எஸ்யூவி மணிக்கு 190கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது 7 சீட்டர் மாடலில் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தாழ்வான கூரை அமைப்புடைய இந்த கார் 5 பேர் செல்லும் வசதி கொண்ட மாடலாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ எஸ்யூவியானது ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டிற்கு முன்னதாக அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. விற்பனைக்கு வரும்போது இந்தியாவின் அதிக விலை கொண்ட மின்சார கார் மாடலாக இருக்கும் என்று கருத முடியும்.


Click it and Unblock the Notifications








