5,000 சர்வீஸ் மையங்கள்... மெகா இலக்குடன் காய் நகர்த்தும் மாருதி நிறுவனம்!
சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கார் வாங்குவோரின் முதல் தேர்வாக மாருதி தயாரிப்புகளே விளங்குகின்றன. சரியான விலை, அதிக மைலேஜ், சிறந்த சேவை போன்ற காரணங்கள் மாருதிக்கு அதிக வலுசேர்க்கின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மிக நெருக்கமான சேவை வழங்கும் திட்டத்துடன் மாருதி காய்களை நகர்த்தி வருகிறது.

இந்தியாவில் தனது சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 5,000 என்ற அளவில் உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாருதியின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் சுஸுகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தோஹிஹிரோ சுஸுகி பங்குதாரர்கள் கூட்டத்தில் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய மார்க்கெட்டில் தனது பங்களிப்பை தக்க வைப்பதற்காக சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை பெருவாரியாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறி இருக்கிறார். தற்போது நாட்டிலுள்ள 1,667 நகரங்களில் 2,000 டீலர்ஷிப்புகளுடன் இயங்கி வருகிறது மாருதி. அத்துடன் 3,200 சர்வீஸ் மையங்களும் உள்ளன.

இந்த நிலையில், வரும் ஆண்டுகளில் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது மாருதி நிறுவனம். 5,000 சர்வீஸ் மையங்களில் 3,000 சர்வீஸ் மையங்கள் டீலரின் நேரடி மையங்களாகவும், மற்றவை நேரடி அங்கீகாரம் பெற்ற டீலர் சாராத சர்வீஸ் மையங்களாகவும் இருக்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 விற்பனை மையங்களையும், 1,800 சர்வீஸ் மையங்களையும் திறக்க மாருதி திட்டமிட்டுள்ளது. அதாவது, மூன்றாம் நிலை நகரங்களிலும் மாருதி நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக கிடைக்கும்.

இதனால், வாடிக்கையாளர்களை எளிதாக தக்க வைக்க முடியும் என மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நம்புகிறது. நிச்சயம் இந்த செய்தி மாருதி பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications







