இந்திய கார் மார்க்கெட்டில் திருப்புமுனை ஏற்படுத்திய மாருதி செலிரியோ ஏஎம்டி!
மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி மாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் சிறிய கார் மாடல்களில் மாருதி செலிரியோ காரும் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த கார் மாருதி நிறுவனத்துக்கு விற்பனை வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறது.

இந்த கார் இந்தியர்களை கவர்ந்ததற்கு மிக முக்கிய காரணம், ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வந்ததுதான் முக்கிய காரணம். இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்த முதலாவது கார் என்ற பெருமையை பெற்ற செலிரியோவுக்கு எதிர்பார்த்தது போன்றே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் என்பது ஆட்டோமொபைல் உலகிற்கு புதிது கிடையாது. ஆனால், இந்தியாவிற்கு புதிது. 1986ம் ஆண்டிலேயே ஃபெராரி ரேஸ் கார்களில் இந்த கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இது ரேஸ் கார்களில் இடம்பெற்றது.

இந்த நிலையில், இந்திய கார் மார்க்கெட்டின் நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மாருதி நிறுவனம், இந்திய போக்குவரத்து நிலைகளுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்கள் மிகச் சிறந்ததாக இருக்கும் என்பது துல்லியமாக கணித்து அறிமுகம் செய்தது.

இதனை உருவாக்குவதற்கும் அதிகம் மெனக்கெட வில்லை மாருதி. இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்துடன் ஏஎம்டி கியர்பாக்ஸ்களை சப்ளை பெற்று தனது மேனுவல் கார்களில் எளிதாக பொருத்தி அறிமுகம் செய்து வருகிறது மாருதி. இதற்காக அதிக முதலீடு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களும் இல்லை.

சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை போலவே, க்ளட்ச் மிதித்து ஓட்ட வேண்டிய அவசியம் ஏஎம்டி கார்களில் இல்லை. வெறும் பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் மட்டுமே. இதனால், நகர்ப்புறங்களில் ஓட்டுபவர்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் வரப் பிரசாதமாக அமைந்தது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களில் க்ளட்ச் இருக்கும். ஆனால், அது இசியூ கம்ப்யூட்டர் மற்றும் சென்சார்கள் உதவியுடன் காரின் வேகத்துக்கு தக்கவாறு இயக்கப்படுகிறது. எனவேதான், இதனை முழுமையான ஆட்டோமேட்டிக் காராக இதுவரை ஒப்புக்கொள்ளப்படவில்லை.

மேலும், ஆட்டோமேட்டிக் கார்கள் மைலேஜ் குறைவாக தரும். ஆனால், ஏஎம்டி கார்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்கும். அத்துடன், இந்த ஏஎம்டி கியர்பாக்ஸை சாதாரண மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் பொருத்துவதும் சுலபலம். எனவே, இதற்கான தயாரிப்பு செலவீனம் குறைவு.

அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் என்பது மேனுவல் கியர்பாக்ஸ் போன்றே தொழில்நுட்பம் இருப்பதால், உள்ளூர் மெக்கானிக்குகள் கூட எளிதாக பழுது நீக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், பராமரிப்பு செலவும் குறைவு.

இவற்றை கணக்குப்போட்டு, இந்தியர்களுக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ் என்று செலிரியோவில் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் மாருதி களமிறக்கியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இப்போது பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது பட்ஜெட் கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸை அறிமுகம் செய்து வருகின்றன.

எனவே, இந்தியர்களின் கார் ஓட்டும் முறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை மாருதி செலிரியோ காருக்கு உண்டு. இந்த நிலையில், டாடா டியாகோ, ரெனோ க்விட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட புதிய கார் மாடல்களால் மாருதி செலிரியோ காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த காருக்கு புதுப்பொலிவு கொடுக்கிறது மாருதி. வரும் பண்டிகை காலத்தில் பல புதிய மாற்றங்களுடன் மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications