"ஜிஎஸ்டி பற்றி கவலை இல்லை"... ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரம்; மாருதி சுசுகி அதிரடி..!!
"ஜிஎஸ்டி பற்றி கவலை இல்லை"... ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரம்; மாருதி சுசுகி அதிரடி..!!
ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்தால் இந்தியாவில் ஹைஃபிரிட் கார்களின் விலை உயர்ந்தன. இது ஆட்டோமொபைல் துறையை சார்ந்தவர்களை கவலை அடைய செய்துள்ளது.

இந்த பாதிப்பை குறித்து துளிக்கூட கவலையில்லாமல், ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரமாக இறங்கப்போவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.

மைல்ட் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை பெற்ற கார்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளது மாருதி சுசுகி.

தற்போது இந்நிறுவனம் சியாஸ் செடான் மற்றும் எர்டிகா எம்.பி.வி ஆகிய கார்களை மைல்ட் ஹைஃபிரிட் முறையில் தயாரித்து வருகிறது.

வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை குறைந்து மின்சாரம் மற்றும் ஹைஃபிரிட் கார்களுக்கு விற்பனை அதிகரிக்கும்.

இதனால் தான் இந்தியாவில், பல்வேறு கார் நிறுவனங்கள் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.

ஆனால் கடந்த 1ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலாக்கப்பட்ட பிற்பாடு, ஹைஃபிரிட் கார்களின் விலை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

அதற்கு காரணம், ஹைஃபிரிட் கார்கள் அனைத்தும் ஆடம்பர தேவைகளுக்கான பிரிவில் வருகின்றன. அதனால் செஸ் வரி உட்பட ஜிஎஸ்டி-யின் கீழ் 43 சதவீதம் வரி இதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கென்னிச்சி அயூகாவா கூறும்போது,
"ஹைஃபிரிட் தொழில்நுட்பம் பெற்ற கார்களை தயாரிக்க நாங்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டோம். சுற்றுச்சூழலை பாதிக்காத கார்களை நாங்கள் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம்" என்று தெரிவித்தார்.

ஹைஃபிரிட் திறன் பெற்ற கார்கள் மீது தற்போது இந்தியா அரசு விதித்துள்ள வரி மதிப்பை குறைக்கும் என மாருதி சுசுகி எதிர்பார்த்துள்ளது.

அனைத்து ரக வாகனங்களுக்கு இணையாக ஹைஃபிரிட் கார்களை மத்திய அரசு பார்க்கக்கூடாது என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








