மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் பெங்களூரில் துவங்கியது!
மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தின் துவக்க நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடந்தது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் மிக சவாலான ராலி பந்தயங்களில் ஒன்றான மாருதி தக்ஷின் டேர் பந்தயத்திற்கான துவக்க நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடந்தது. இந்த ராலி பந்தயத்தில் 180 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்முறையாக மாருதி தக்ஷின் ராலி பந்தயத்தின் வழியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தென் இந்தியாவின் மிக சவாலான நிலப்பரப்புகளை கடந்து மேற்கு இந்தியாவின் மிகவும் கடினமான நிலப்பரப்புகளை கடக்கும் விதத்தில் இந்த ராலி பந்தயத்தின் வழித்தடம் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரில் துவங்கும் இந்த பந்தயம் சித்ரதுர்கா, பெல்காம் மற்றும் கோல்ஹாப்பூர் வழியாக புனே நகரில் நிறைவடைய உள்ளது. வரும் 22ந் தேதி நிறைவடையும் இந்த ராலி பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் புனேயில் நடக்க உள்ளது.

என்டியூரன்ஸ், அல்டிமேட் கார் மற்றும் அல்டிமேட் பைக் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த பந்தயம் நடக்கிறது. இந்த பந்தயத்தின்போது சுமார் 2,000கிமீ தூரத்திற்கும் மேலாக போட்டியாளர்கள் பயணிக்க வேண்டி இருக்கும். போட்டியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் பல நெறிமுறைகள் கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தில் முதலிடம் பிடித்த சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் ஆகியோர் அல்டிமேட் கார் பிரிவில் மாருதி ஜிப்ஸி பயன்படுத்தி வரும் சந்தீப் ஷர்மா மற்றும் கரண் ஆர்யா இடையில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டியூரன்ஸ் கார் பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பயன்படுத்தி வரும் ஜெக்மீத் கில் மற்றும் சந்தன் சென் ஆகியோர் எஸ் க்ராஸ் காரை பயன்படுத்தி வரும் கார்த்திக் மாருதி மற்றும் சங்கர் ஆன்ந்த் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி இருக்கும்.

மாருதி சுஸிகி மோட்டோர்ஸ்போர்ட்ஸ் பிரிவின் அதிகாரப்பூர்வ லூப்ரிகேன்ட் ஸ்பான்சராக மொபில்1 ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான டெசர்ட் ஸ்டோர்ம், தக்ஷின் டேர் மற்றும் ரெய்ட் டி ஹிமாலயா ஆகிய பந்தயங்களுக்கும் மொபில்1 நிறுவனம் ஸ்பான்சராக செயல்படுகிறது.
பெங்களூரில் நேற்று துவங்கிய மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தய துவங்க விழாவில் மொபில்1 ஆயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications








