இந்தியாவில் நேரடி கார் விற்பனையை துவங்குகிறது மெக்லாரன் !
இந்தியாவில் நேரடி கார் விற்பனையை துவங்குவதற்கு மெக்லாரன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் சூப்பர் கார்களுக்கு அதிகரித்து வரும் மவுசை கருத்தில் கொண்டு, நேரடியாக கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு மெக்லாரன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சூப்பர் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஃபெராரி, போர்ஷே, லம்போர்கினி, அஸ்டன் மார்ட்டின் மற்றும் மஸேரட்டி உள்ளிட்ட சூப்பர் கார் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த வரிசையில், ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த மெக்லாரன் நிறுவனமும் இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
Recommended Video


அடுத்த ஆண்டு இந்தியாவில் மெக்லாரன் கார் நிறுவனம் நேரடியாக களமிறங்க உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் 2023ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 5,000 கார்களை விற்பனை செய்ய மெக்லாரன் இலக்கு வைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச அளவில் பல புதிய நாடுகளில் வர்த்தகத்தை துவங்குவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனத்திடம் திட்டம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், மெக்லாரன் 675 எல்டி, 675எல்டி ஸ்பைடர், பி1 ஹைப்பர் கார் உள்ளிட்ட கார்கள் அனைத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள மெக்லாரன் 540சி, 570எஸ், ஜிடி, 650எஸ் மற்றும் 720எஸ் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இதில், அந்த நிறுவனத்தின் 540சி என்ற குறைவான விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலை ஆண்டுக்கு 10 கார்கள் என்ற அளவில் இந்தியாவில் விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் இலக்கு வைத்து திட்டம் தீட்டி வருகிறது.

மெக்லாரன் வருகை நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதேநேரத்தில், போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








