கார் விற்பனையில் குளறுபடி செய்த மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்..!
விற்பனையில் குளறுபடி செய்ததால் மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரை சேர்ந்த ரஞ்சன் ஜெயின் என்பவர் கடந்த 2015ல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை அங்குள்ள பகத் ஆட்டோமோடிவ் என்ற டீலரிடம் வாங்கியுள்ளார்.

அவர் கார் வாங்கியது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதமாகும். இந்த காருக்கான நீட்டிக்கப்பட்ட ஒரு வருட வாரண்டியை வேறு டீலரிடம் வாங்கியுள்ளார் ரஞ்சன்.

ஆனால், அந்த பாலிசி பத்திரத்தில் கார் வாங்கிய மாதமான அக்டோபர் 2015க்கு பதிலாக ஏப்ரல் 2015 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் வாங்கிய காருக்கு மெர்சிடிஸ் நிறுவனம் 3 ஆண்டுகள் வாரண்டி தந்துள்ளது.

இத்துடன் சேர்த்து நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை வாங்கிக் கொள்வது நல்லது என்ற அடிப்படையில் ரஞ்சன் இந்த திட்டத்தில் இணைந்தார்.

வாங்கப்பட்ட புதிய காருக்கு நிறுவனம் அளிக்கும் வாரண்டி காலம் முடிவடைந்த பின்னர் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி காலம் துவங்கும்.

இந்த அடிப்படையில் ரஞ்சன் வாங்கியுள்ள காருக்கு 3 ஆண்டுகள் அதாவது அக்டோபர் 2018 வரை நிறுவனத்தின் வாரண்டி காலம் ஆகும்.

கூடுதலாக இவர் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற்றுள்ளதால் மொத்தமாக இவரின் கார் வாரண்டியானது அக்டோபர் 2019 வரை இருக்க வேண்டும்.

ஆனால் பாலிசி பத்திரத்தில் ரஞ்சனின் காருக்கான வாரண்டி ஏப்ரல் 2019 உடன் முடிவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக வாரண்டி வாங்கிய டீலரிடம் சென்று முறையிட்டுள்ளார் ரஞ்சன். அவருக்கு சரியான தீர்வை டீலர் தராததால் அதிருப்தி அடைந்தார்.

இதன் காரணமாக முறைகேடாகவும், குளாறுபடியும் செய்து தன்னிடம் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முறையிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரஞ்சன்.

இந்த நோட்டீசை ரஞ்சனின் வழக்கறிஞர் கடந்த ஜூன் 4, 2016 ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலமாக அந்த டீலருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில் முறைகேடாக தேதியை மாற்றி என்னிடம் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் இந்த காருக்கு பதிலாக புதிய காரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், புதிதாக காரை மாற்றித்தர இயலாது என்றாலும் இதற்கு தீர்வு அளிக்கப்படும் என்று ரஞ்சனுக்கு டீலர் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மேற்கொண்டு டீலரிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த பிரச்சனையை நுகர்வோர் மன்றத்திற்கு எடுத்துச் சென்றார் ரஞ்சன்.

செகண்ட் ஹேண்ட் காரை புதிது எனக்கூறி ஷோரூம் நிர்வாகத்தினர் தன்னிடம் விற்பனை செய்துவிட்டதாகவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மெர்சிடிஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தில் இது டீலர் செய்த தவறு என்றும் எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பின்னர், ரஞ்சனுக்கு கார் விற்பனை செய்யப்பட்ட தேதியில் குளறுபடி நடந்துள்ளது என்பதனை மெர்சிடிஸ் டீலரான பகத் ஆட்டோமோடிவ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

வாடிக்கையாளரான ரஞ்சனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தினால் ரூ.3.5 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications








