புகை மாசை ஏற்படுத்திவரும் ஃபோக்ஸ்வேகனுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!
புகை மாசுபாட்டு மோசடி பிரச்சனையில் உள்ள கார்களை திரும்பபெறுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய பசுமை தீர்ப்பாயம். அது குறித்த தகவல்கள்.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் டீசல் கார்களின் மாசு உமிழ்வு அளவை குறைத்துக் காட்டுவதற்காக விசேஷ சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. பின்னர் இப்பிரச்சனையை சரிசெய்து தருவதாக கடந்த ஆண்டு உறுதி அளித்திருந்தது.

கார்களை பழுதி நீக்கித் தர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சலோனி என்பவர் வழக்கு தொடர்ந்தன் பேரில், பிரச்சனைக்குரிய கார்களை திரும்பப் பெறுவது தொடர்பாக செயல்திட்டம் குறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

பழுதி நீக்கித் தர காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் சுற்றுச்சூழல் கேட்டிற்காகவும், அத்துமீறலுக்காகவும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில், பழுது நீக்கி தரப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உறுதியளித்து, ஒரு வருடம் ஆகிய நிலையில், இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்காததால் கிட்டத்தட்ட 3.14 லட்சம் ஃபோக்ஸ்வேகன் கார்களால் மாசுபாடு ஏற்பட்டு வருவதற்காக ஏன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கக்கூடாது எனவும் வினவியுள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் கார்களால் நாட்டின் மாசு கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் மீறப்படவில்லை என்றும், நாட்டு மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வழக்குதாரர், தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

புகை மாசு மோசடியால் உருவாக்கப்பட்ட எஞ்சின் கொண்ட கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளதா என மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம், ஆராய் எனப்படும் ஆட்டோமோடிவ் ரிசர்ச் அசோசியேசன் ஆஃப் இந்தியா அமைப்பிடம் கேட்டது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புகை மாசு மோசடியால் உருவாக்கப்பட்ட எஞ்சின்கள் கொண்ட கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது என்பதனை ஆராய் கண்டறிந்தது. அதன் எண்ணிக்கை 3.14 லட்சம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், குறைபாடு உள்ள 3.14 லட்சம் கார்களின் மென்பொருளை மறுவடிவமைப்பு செய்து வருவதாகவும் ஆராய்க்கு ஃபோக்ஸ்வேகன் பதிலளித்திருந்தது. ஆயினும் 70% அளவிலான பணிகளே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 30% பணிகள் நடந்து வருவதாக ஃபோக்ஸ்வேகன் கூறியுள்ளது.

இது தொடர்பான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அறிக்கையில், குறைபாடு உள்ள கார்களில் புதிதாக ஈஏ189 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்படும் எனவும் மென்பொருள் மறுவடிவமைப்பு பணிகள் முடிந்த பின்னர் குறைபாடு நீக்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் புதிதாக வெளியிட்டுள்ள எலெக்ட்ரிக் வாகனமான ஐடி பஸ் வாகனத்தின் படங்கள்:


Click it and Unblock the Notifications








