சுங்கச் சாவடியில் க்யூவில் நிற்காமல் செல்வதற்கான மொபைல் ஆப் அறிமுகம்!
சுங்கச் சாவடிகளில் மின்னணு பரிமாற்ற முறையில் பணம் செலுத்துவதற்கான புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
சுங்கச் சாவடிகளில் க்யூவில் நிற்காமல் செல்வதற்கான புதிய மொபைல் அப்ளிகேஷனை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால், அதிக கால விரயம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஃபாஸ்டேக் என்று அழைக்கப்படும் மின்னணு கட்டணம் செலுத்தும் வசதி சுங்கச் சாவடிகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல சுங்கச் சாவடிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் மின்னணு அட்டை மூலமாகவோ அல்லது வாகனங்களில் தயாரிக்கப்படும்போதே கொடுக்கப்படும் அடையாள அட்டை மூலமாகவோ இந்த வசதியை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
Recommended Video


இந்த நிலையில், இதற்காக இரண்டு பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. MyFASTag app மற்றும் FASTag Partner என்ற பெயர்களில் இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

முதலாவது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, ஏற்கனவே RFID அடையாள எண் அட்டை பதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் இந்த மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, வங்கியை தேர்வு செய்து வாகன பதிவு எண், பெயர் விபரம் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலியில் பதிவு செய்தால் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

கடந்த 2013 ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இதுவரை 74 லட்சம் கார்களில் RFID அடையாள அட்டை பொருத்தப்பட்டுள்ளது. விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டால், ஃபாஸ்டேக் தடத்தை கடக்கும்போது, தானியங்கி முறையில் பணம் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த கார்களின் உரிமையாளர்கள் MyFASTag அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவதாக Fastag Partner அப்ளிகேஷன் என்பது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் வாகன விற்பனை மையங்கள் போன்றவற்றின் மூலமாக, ஃபாஸ்டேக் மின்னணு கட்டணம் செலுத்தும் அட்டையை விற்பனை செய்வோருக்கானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் தீபக் குமார் கூறுகையில்," மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கான அட்டைகளை வாங்குவதும், அதனை ரீசார்ஜ் செய்வதும் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதனை மனதில் வைத்துதான், இந்த முறையை எளிதாக்கும் விதத்தில், புதிய மொபைல்போன் அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துள்ளோம். வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 371 சுங்கச் சாவடிகளிலும் மின்னணு கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும்.

ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் ஃபாஸ்டேக் அட்டை பொருத்தப்பட்ட வாகனங்களுக்காக பிரத்யேக தடம் ஏற்படுத்தப்படும். இந்த தடங்களில் ஃபாஸ்டேக் அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதேநேரத்தில், பிற தடங்களில் வழக்கமான கட்டணம் பெறும் முறை இருக்கும்," என்று கூறி இருக்கிறார்.

ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களில் இந்த மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, கார் உரிமையாளர்கள் க்யூவில் நிற்காமல் மிக எளிதாகவும், விரைவாகவும் சுங்கச் சாவடி கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலையும் குறைக்க உதவும்.


Click it and Unblock the Notifications








