தானியங்கி கார்களை ரிமோட் மூலமாக இயக்கும் புதிய நுட்பம்: அசத்தும் நிஸான்!
சில இக்கட்டான சூழ்நிலைகளில் தானாக இயங்கும் கார்களை ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை செயல் விளக்கம் செய்து காண்பித்துள்ளது நிஸான் கார் நிறுவனம்.
ஓட்டுனர் துணையில்லாமல் தானாக இயங்கும் கார்களை வடிவமைப்பதில் உலகின் பல முன்னணி கார் நிறுவனங்களும், தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாக விளங்கும் நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜப்பானை சேர்ந்த நிஸான் கார் நிறுவனமும் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும், ஜப்பானில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைத்து தானாக இயங்கும் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்ட லீஃப் மின்சார கார்களை அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்தநிலையில், தானாக இயங்கும் கார்களை விரைவாக சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் நிஸான் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சில இக்கட்டான சூழல்களில் தானாக இயங்கும் கார்களை கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக இயக்கும் புதிய தொாழில்நுட்ப முறையை நிஸான் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வரும் தொழில்நுட்பத் துறை கண்காட்சியில், இந்த புதுமையான தொழில்நுட்பத்தை நிஸான்- ரெனோ கூட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் கோஸன் விளக்கி பேசினார்.

"சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானியங்கி கார்களை தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். அத்தகைய சூழல்களில் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக அந்த கார்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளோம்.

மஞ்சள் கோட்டை தாண்டி செல்லக்கூடாது என்ற விதிமுறைக்கு ஏற்ப தானாக இயங்கும் கார்களில் மென்பொருள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், சாலையில் விபத்து ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், மஞ்சள் கோட்டை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அந்த சூழலில், தானாக இயங்கும் கார் அங்கேயே நின்றுவிடும். இந்த சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, அந்த காரை கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஓட்டுனர் உதவியுடன் அந்த இடத்தை கடப்பதற்கான ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளோம்.

அதாவது, காரிலிருந்து வரும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஓட்டுனர் அந்த காரை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார். பின்னர், ரிமோட் கன்ட்ரோல் முறையில் அந்த காரை இயக்கி பாதுகாப்பாக அந்த இடத்தை கடப்பதற்கு உதவி செய்வார்.

மேலும், போலீசாரின் சைகையும் தானாக இயங்கும் கார்களில் இருக்கும் சென்சார் மற்றும் கேமராவுக்கு புரியாமல் போனாலும், கட்டுப்பாட்டு மைய ஓட்டுனர் மூலமாக அந்த காரை தொடர்ந்து இயக்க முடியும். இதுபோன்று, ஒரே நேரத்தில் பல கார்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்," என்று அவர் கூறினார்.

தானாக இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும்போது கோடிக்கணக்கான ஓட்டுனர்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கும் நிலையில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக அது ஓரளவு தவிர்க்கப்படும். மேலும், கால் சென்டர்கள் போன்று ஷிஃப்ட் முறையில் இந்த பணியை ஓட்டுனர்கள் செய்ய முடியும்.

விண்வெளிக்கு அனுப்பப்படும் ரோபோ வாகனங்களை இயக்குவதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்[நாசா] பயன்படுத்தி வரும் ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தானாக இயங்கும் கார்களுக்கான இந்த ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை நிஸான் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், 'தடையற்ற தானியங்கி போக்குவரத்து' என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக தானாக இயங்கும் கார்களை இலக்கு வைக்கப்பட்ட காலத்தைவிட முன்கூட்டியே சந்தைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தானாக இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும்போது சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, நிஸான் கார் நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி கார்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ஆல்பம்!
புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








