பெண் வாடிக்கையாளரை ஏமாற்றிய ஹைதராபாத் நிஸான் டீலருக்கு ரூ.3 லட்சம் அபராதம்!
75 வயது பெண் வாடிக்கையாளரிடம் மோசடி வித்தையை காட்டிய ஹைதராபாத்தை சேர்ந்த நிஸான் கார் டீலருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடத்தில் மோசடி வித்தைகளை காட்டும் கார் டீலர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் இப்போது மீண்டும் ஊடகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டிற்கு பதிலாக, குறைவான வசதிகள் கொண்ட பேஸ் வேரியண்ட் காரை டெலிவிரி கொடுத்து வாடிக்கையாளரை ஏமாற்றிய ஹைதராபாத்தை சேர்ந்த நிஸான் டீலருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் அங்குள்ள தனலெட்சுமி நிஸான் கார் ஷோரூமில் எவாலியா கார் ஒன்றை, கடந்த 2013ம் ஆண்டு முன்பதிவு செய்துள்ளார். அந்த காருக்கு உரிய முழு பணத்தையும் செலுத்திவிட்டார்.

பின்னர் டீலரிடமிருந்து அவர் முன்பதிவு செய்த நிஸான் எவாலியா காரை டெலிவிரி பெற்றிருக்கிறார் அந்த பெண்மணி. இந்த நிலையில், அவர் முன்பதிவு செய்திருந்தது அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட் மாடல். ஆனால், அவருக்கு நிஸான் எவாலியா காரின் எக்ஸ்வி என்ற பேஸ் மாடல் டெலிவிரி கொடுக்கப்பட்டது பின்னர் தெரிய வந்தது.

பேஸ் மாடலைவிட டாப் வேரியண்ட் ஒரு லட்ச ரூபாய்க்கும் கூடுதல் விலை கொண்டது. இந்த நிலையில், டீலரில் இவ்வாறு ஏமாற்றப்பட்டத்து தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் அந்த பெண் வாடிக்கையாளர். இதையடுத்து, ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் பதிவு செய்தார்.

டீலரால் ஏற்பட்ட இழப்பு குறித்து விரிவாக தனது புகார் மூலமாக பதிவு செய்தார். ஆனால், இந்த புகாரை டீலர் வட்டாரத்தில் இருந்து திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. அதனை பொய்புகார் என்றும் தெரிவித்தது.

இதுகுறித்து நுகர்வோர் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அதில், அந்த 75 பெண்மணியை டீலரை சேர்ந்தவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தனலெட்சுமி நிஸான் என்ற அந்த டீலருக்கு ரூ.3.05 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டது. இந்த அபாரத தொகை அந்த பெண்மணியிடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற மோசடிகள் டீலர் வட்டாரத்தில் அதிகம் நடக்கின்றன. கார் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஷோரூமிலிருந்து கார் டெலிவிரி பெறுவதற்கு முன்னர் அனைத்தையும் சரிபார்த்த பின்னரே டெலிவிரி பெறுவது அவசியம்.

இன்வாய்ஸ் போட்டுவிட்டால், அந்த காரை மாற்ற இயலாது என்று காரணத்தை பிடித்துக் கொண்டுவிடுவர். எனவே, நீங்கள் டெலிவிரி எடுக்கும் காரில் இருக்கும் கீறல்கள் அல்லது சேதாரங்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

டெஸ்ட் டிரைவ் போன்ற விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கார்கள் கூட டீலர்களில் பாலிஷ் செய்து புதிய கார் போல வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. பொதுவாக பகல்வேளைகளில் கார் டெலிலிரி பெறுவது சிறந்தது.

கார் டெலிவிரி பெறும்போது அவசரப்பட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை ஆவணங்கள், செலுத்திய தொகைக்கான ரசீதுகள் உள்ளிட்டவற்றை சரி பார்த்துக் கொண்டு பின்னர் ஒப்புக் கொள்ள வேண்டும்.
புதிய தலைமுறை நிஸான் மைக்ரா காரின் படங்கள்!
புதிய நிஸான் மைக்ரா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








