ரூ.5,000 கோடி நிலுவைத் தொகை... இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுத்த நிஸான்... !!
ரூ.5,000 கோடி நிலுவைத்தொகையை வழங்கக் கோரி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிஸான் கார் நிறுவனம். கூடுதல் தகவல்களை செய்தியில் விரிவாக படிக்கலாம்.
சென்னையில் அமைக்கப்பட்ட கார் ஆலைக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகைக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி இந்தியா மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் நிஸான் கார் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு நிஸான் கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம் தனது சர்வதேச கூட்டணி நிறுவனமாக செயல்படும் பிரான்ஸ் நாட்டின் ரெனோ நிறுவனத்துடன் இந்தியாவில் கார் ஆலை அமைக்க திட்டமிட்டது. சென்னையில் கார் ஆலை அமைக்க முடிவு செய்து, அதற்காக 2008ம் ஆண்டு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதையடுத்து, ரூ.4,500 கோடி முதலீட்டில் இந்த புதிய கார் ஆலை சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் துவங்கின. தற்போது இந்த ஆலையில் நிஸான், ரெனோ மற்றும் டட்சன் நிறுவனங்களின் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாடு மட்டுமின்றி, பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு கார் ஆலை அமைப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2015ம் ஆண்டிலிருந்து தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகை போன்றவற்றை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இந்த வரிச்சலுகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு பல நினைவூட்டல் கடிதங்களை நிஸான் நிறுவனம் அனுப்பி இருக்கிறது. ஆனால், அதற்கு தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மேலும், தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் நிஸான் உயரதிகாரிகள் பல முறை பேச்சு நடத்தியிருக்கின்றனர்.

ஆனால், எதற்குமே உரிய தீர்வு கிட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்னையை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கும் உரிய தீர்வு கிட்டவில்லை.

கடந்த ஆண்டு நிஸான்- ரெனோ கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் கோஸன் இப்பிரச்னை தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாத நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.5,000 கோடி நிலுவைத் தொகையை இந்தியா வழங்குவதற்கு உத்தரவிடக் கோரி சர்வதேச தீர்ப்பாயத்தில் நிஸான் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த நிலையில், சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு இந்த மாத மத்தியில் விசாரணைக்கு வர இருப்பதாக தெரிகிறது. இதனால், இந்த விவகாரம் இப்போது மீடியாவின் கவனத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும், இந்த பிரச்னையை மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி சமூகமாக தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு இருப்பதாக நிஸான் கார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் சென்னையில் கார் ஆலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் எழவில்லை என்றாலும் புதிதாக கார் ஆலை அமைக்க வரும் நிறுவனங்களும், விரிவாக்கம் செய்ய நினைக்கும் நிறுவனங்களும் தொடர்ந்து தமிழகத்தை தவிர்த்து வருகின்றன.

ஃபோர்டு கார் நிறுவனம் தமிழகத்தில் கார் ஆலையை விரிவாக்கம் செய்யாமல், குஜராத்தில் புதிய ஆலையை அமைத்தது. இதேபோன்று, ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தை தவிர்த்துள்ளது. கார் ஆலை அமைக்க அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்பதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. பீஜோ கார் நிறுவனம் கூட தமிழகத்தை விரும்பவில்லை என்று செய்திகள் கூறின. தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்ற புகழை பெற்ற தமிழகம் இப்போது அவப்பெயரை தொடர்ந்து சம்பாதித்து வருகிறது.

இந்த நிலையில், வரிச்சலுகைக்கான தொகையை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதனால், தமிழகத்தில் புதிய கார் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் மோடி துவங்கி வைத்த, "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஏனெனில், இந்தியாவுக்கு எதிராக 20 வழக்குகள் சர்வதேச தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ளதாம். உலகிலேயே ஒரு நாட்டிற்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நாடாகவும் இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா பின் தங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








