அம்பாசடர் காரை மீண்டும் களமிறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு கோரிக்கை மனு!
மீண்டும் அம்பாசடர் காரை உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு ஆவணச் செய்யுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் ராஜாவாக வலம் வந்த கார் அம்பாசடர். அம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த காரை பலர் தம்பி போலவே பாவித்து பராமரித்து வந்தனர். அதிக இடவசதி, கட்டுறுதியான சேஸி, நீடித்த உழைப்பு போன்றவை இந்த காருக்கு நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்று வந்தது. இன்றும் அம்பாசடர் காருக்கு ரசிகர்கள் ஏராளம்.

57 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த அம்பாசடர் காரை சந்தைப் போட்டி மற்றும், மாசு உமிழ்வு அம்சத்திற்கு தக்கவாறு மேம்படுத்தப்பட முடியாத அளவுக்கு பொருளாதார வலு இல்லாத நிலையில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தத்தளித்தது. இதையடுத்து, அம்பாசடர் காரின் உற்பத்தியை 2014ம் ஆண்டு நிறுத்தியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் மாடல், இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார் போன்ற பெருமைகளை தாங்கியிருந்தும் அவை பொருளாதார பிரச்னையால் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. ஊரகப் பகுதிகளில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும் இந்த கார் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் வழக்கொழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பாசடர் காரை மேம்படுத்தி மீண்டும் உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்தி, change.org என்ற இணையதள அமைப்பு பிரதமர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலமாக கோரிக்கை மனுவை வைத்துள்ளது. இந்த மனு மீது பிரதமர் அலுவலகம் என்ன மாதிரியான பதிலை தரப்போகிறது என்பதை பார்க்க அம்பாசடர் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, அம்பாசடர் காரை மீண்டும் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமா என்பது பலரின் மனதில் உள்ள கேள்வி. ஆனால், மத்திய அரசு மனது வைத்தால் இந்த கார் மீண்டும் மார்க்கெட்டிற்கு வருவது சாத்தியம்தான் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு அம்சத்திற்கு தக்கவாறு எஞ்சினை மேம்படுத்துவதற்கு போதிய நிதி இல்லாமல் போனதே அம்பாசடர் காரின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும், சந்தைப் போட்டிக்கு தக்கவாறு வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த நிலையில், ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு போதிய நிதி ஆதாரம் தேவை என்பதே இப்போதைய முக்கிய பிரச்னையாக மாறி இருக்கிறது. எனவே, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நிதி ஆதாரத்தை அளித்து, அம்பாசடர் காரை மீண்டும் களமிறக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில், ஃபியட் 500 கார்களை போன்று அம்பாசடரையும் மேம்படுத்தி அறிமுகம் செய்தால், நிச்சயம் அம்பாசடருக்கு என்றும் பதினாறு என்பது பலரின் கருத்தாக உள்ளது. அம்பாசடர் கார் மீண்டும் வர விரும்பும் ரசிக பெருமக்கள் Change.org என்ற இந்த இணையதளத்திற்கு சென்று அம்பிக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம்.
புதிய நிஸான் மைக்ரா காரின் படங்கள்!
முற்றிலும் மாறிப்போன புதிய தலைமுறை நிஸான் மைக்ரா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் சென்று கண்குளிர பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








