ஜெனரல் மோட்டார்ஸை சொந்தமாக்க சீனாவின் SAIC திட்டம்; ’மேக் இன் இந்தியா’வில் ஒரு புது உறுப்பினர்..!!
ஜெனரல் மோட்டார்ஸை சொந்தமாக்க சீனாவின் SAIC திட்டம்; ’மேக் இன் இந்தியா’வில் ஒரு புது உறுப்பினர்..!!
சீனாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரி கார்ப்பிரேஷன் (SAIC), விரைவில் இந்தியாவில் கால்பதிக்கவுள்ளது.
சீனாவில் ஆண்டிற்கு சுமார் 100 பில்லியன் வர்த்தக்கத்தை நடத்தும் SAIC நிறுவனம், இந்தியாவில் நுழைய பல ஆண்டுகளாகவே நாள் பார்த்து காத்திருந்தது.

இதற்கு சரியான நேரம் அமைந்தது போன்று, எம்.ஜி என்ற பெயரில் பிரிட்டனில் இயங்கும் தனது குழுமத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இந்தியாவில் கார்களை தயாரிக்கிறது SAIC.
இந்தியாவில் இயங்கும் தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை SAIC, எம்.ஜி மோட்டார் இந்தியா என்ற பெயரில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் சி.இ.ஒ-வாக இருந்த ராஜீவ் சாபாவையே தன் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கானத் தலைவராக SAIC நியமிதத்துள்ளது.

சீனாவில் 2013 வரை SAIC, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. அப்போது சந்தை மற்றும் விற்பனை பிரிவு தலைவராக இருந்தவர் ராஜீவ் சாபா.

இவரது கால கட்டத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே கார்கள் சீனாவில் நல்ல விற்பனை விகிதத்தை பெற்றிருந்தன. இதன்மூலம் ராஜீவ் சாபாவின் பெயர் சீனா ஆட்டோமொபைல் துறையில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

சீனாவில் மட்டுமல்லாமல், ராஜீவ் சாபா, 2005-2006 காலகட்டத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
பெரும் நஷ்டத்தை மட்டுமே பார்த்து வந்த அந்நிறுவனம் இவரது காலகட்டத்தில் கணிசமான லாபத்தை இந்தியாவில் சம்பாதித்தது.

சீனா மற்றும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தாலே ராஜீவ் சாபா எம்.ஜி மோட்டார் இந்தியாவின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.

அதேபோல SAIC ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற நிறுவனங்களுடனும் சீனாவில் கூட்டணி அமைத்து கார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் சாபா மட்டுமின்றி, ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய நிறுவனத்தை சேர்ந்த பி.பாலேந்திரனை, எம்.ஜி மோட்டார் இந்தியாவின் செயல் இயக்குநராக SAIC நியமித்துள்ளது.

உலகளவில் ஹேட்ச்பேக், செடான், எஸ்.யூ.வி, எம்.பி.வி, ஹைபிரிட், எலெக்ட்ரிக் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் கார்களை தயாரித்து வரும் SAIC, இந்தியாவில் 2019ம் ஆண்டு முதல் கார் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் SAIC நிறுவனத்தின் அனைத்து ரக கார்களும் எம்.ஜி முத்திரையை உடன் தான் விற்பனைக்கு வரும்.

SAIC-க்கிற்கு மேக்ஸஸ், ரோய்வ் என்ற பெயரில் சில குழும நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்பட்டு உள்ளன.

இந்தியாவில் தற்போது எஸ்.யூ.வி கார்களுக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களிடமும் எஸ்.யூ.வி மீது மிகப்பெரிய மோகம் உள்ளது.
இதை பயன்படுத்தி SAIC, எம்.ஜி மோட்டார் இந்தியா பெயரில் முதலில் எஸ்.யூ.வி கார்களை தான் இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலை குஜராத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வந்தது. இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து, ஹலோல் தொழிற்சாலை மூடப்பட்டது.

தற்போது அதே தொழிற்சாலையை SAIC தனது எம்.ஜி மோட்டார் இந்தியா கார்களை தயாரிக்க பயன்படுத்திக்கொளும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

இது நடைபெறும் பட்சத்தில் அரசாணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் ஜெனரல் மோட்டார்ஸிற்கு விடிவு காலம் ஏற்பட்டது போல இருக்கும். மேலும், இதனால் ஊழியர்கள், டீலர்கள் ஆகியோருக்கும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படாமல் இருக்கும்.

2020ம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா உருவாகலாம் என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்து. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில், புதிய வசதிகளுடன் கூடிய கார்களை தயாரிகக் வேண்டும் என்பதே SAIC எம்.ஜி மோட்டார் நிறுவனத்தின் இலக்கு..!


Click it and Unblock the Notifications








