டிரைவரில்லாமல் இயங்கும் டாடா ஹெக்ஸா கார் சோதனை ஓட்டம் !
டிரைவரில்லாமல் இயங்கும் டாடா ஹெக்ஸா கார் சோதனை முறையில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த தானியங்கி கார் குறித்த பல கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை உருவாக்கும் முயற்சிகளில் உலக அளவில் பல முன்னணி கார் நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. நம் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அந்தவகையில், டாடா ஹெக்ஸா காரின் டிரைவர்லெஸ் மாடல் இப்போது இங்கிலாந்தில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த தகவல் கிடைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையுமே, இங்கிலாந்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம்[TMETC] உருவாக்கி வருகிறது.

அந்த வகையில், அந்த மையம் உருவாக்கி இருக்கும் டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கான தொழில்நுட்பம் தற்போது டாடா ஹெக்ஸா காரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தானியங்கி நுட்பத்தில் இயங்கும் கார்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசு அதிக ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்காக, ஆட்டோடிரைவ் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆட்டோடிரைவ் அமைப்புடன் இணைந்து கார் நிறுவனங்கள் தங்களது தானியங்கி கார் நுட்பத்தை இங்கிலாந்து சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், டாடா ஹெக்ஸா காரின் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை டாடா தொழில்நுட்ப மையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனமும் தனது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடலில் தானியங்கி நுட்பத்தை வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. ஆனால், டாடா மோட்டார்ஸ் மற்றும் லேண்ட்ரோவர் ஆகியவை தனித்தனியாக இந்த தானியங்கி நுட்பத்தை உருவாக்கி சோதனை ஓட்டம் செய்து வருகின்றன.

தானியங்கி முறையில் இயங்கும் கார்களில், கண்காணிப்புக்காக பொறியாளர்களும், ஓட்டுனர் ஒருவரும் இடம்பெற்று இருக்கின்றனர். இவர்கள் காரின் இயக்கத்தை கண்காணித்து மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையத்திற்கு பின்னூட்டம் வழங்கி வருகின்றனர்.

தானியங்கி நுட்பம் மற்று் கருவிகள் பொருத்தப்பட்ட டாடா ஹெக்ஸா காரின் உட்புறத்தில் பல்வேறு கூடுதல் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. காரின் தானியங்கி இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான விசேஷ கம்ப்யூட்டர் சாதனங்களும், திரைகளும் கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன.

வழியில் உள்ள எச்சரிக்கை சமிக்ஞைகள், வேக வரம்பு எச்சரிக்கை பலகைகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்களை இனம் கண்டு கொள்வதற்கான தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்படுவதை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் வசதியும் இருக்கிறது.

சாலை சந்திப்புகளில் குறுக்காக கடக்கும் வாகனங்கள் சிக்னல் இல்லாமலேயே வேகத்தை கட்டுப்படுத்தி, விபத்தில்லாமல் கடக்கும் விசேஷ நுட்பம் இந்த காரில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கார் பார்க்கிங் பகுதிகளில் காலியாக இருக்கும் இடங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வசதியும் இந்த காரில் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் பற்றிய நிகழ்நேர தகவல்களையும் இந்த கார்களின் மூலமாக பெற முடியும்.


Click it and Unblock the Notifications